ராஜ்யசபா சீட்... கோகுல இந்திராவுக்காக ‘விவிவிஐபி’ டாக்டர் பரிந்துரை- அதிமுக ஷாக்
Recommended Video
சென்னை: அதிமுகவில் கோகுல இந்திராவுக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என அக்கட்சி தலைமைக்கு 'விவிவிஐபி' டாக்டர் ஒருவர் பரிந்துரைத்துள்ளதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.
அதிமுகவில் ராஜ்யசபா சீட் கேட்டு அரைடஜன் பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நெருக்கிக் கொண்டிருக்கிறார். தம்பிதுரை, கேபிமுனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என பெருந்தலைகளும் இதில் அடக்கம்.
இவர்களில் அன்வர் ராஜா, தமக்குத்தான் ராஜ்யசபா சீட் வேண்டும் என கடிதமே எழுதிவிட்டார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமக்கு வாய்ப்பளிக்கப்பட்டாக வேண்டும் என்கிற மிரட்டல் தொனியிலான கடிதம் அது. அது முதல்வர் எடப்பாடியார் தரப்பை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.
புதுமுகத்தை தேடும் முதல்வர்
ஆனால் முதல்வர் எடப்பாடியோ யாருக்கு சீட் கொடுத்தாலும் அக்கப்போர்தான் என நொந்து போயிருக்கிறார். இதனால் ஜெயலலிதா பாணியில் யாரும் எதிர்பார்க்காத தமது ஆதரவு ஒரு சீனியரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறாராம் எட்ப்பாடியார்.
கோகுல இந்திராவுக்கு பரிந்துரை
இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் பெயரை முன்வைத்து அதிமுக வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகின்றன. கோகுல இந்திராவுக்காக தமிழகத்தின் மிக முக்கியமான விவிவிஐபி டாக்டர் ஒருவர் பரிந்துரைக்கு வந்துள்ளாராம்.
குடும்ப ரீதியாக உறவு
கோகுல இந்திராவுக்கு ராஜ்யசபா சீட் கொடுங்க... என்னோட அன்பான வேண்டுகோள் இது என பலரையும் தூது மேல் தூது அனுப்புகிறாராம் அந்த டாக்டர். கோகுல இந்திரா குடும்ப உறவுகளில் அந்த டாக்டர் குடும்ப உறவுகளுடன் நெருக்கமாம்.
அதிமுக அதிர்ச்சி
அந்த உறவின் அடிப்படையில்தான் டாக்டரிடம் இருந்து பரிந்துரைகளும் தூதுகளும் போய்க் கொண்டிருக்கிறதாம். ஏற்கனவே யாருக்கு கொடுத்தாலும் பஞ்சாயத்து என தவித்து வரும் முதல்வர் எடப்பாடிக்கு மட்டுமல்ல அதிமுக தலைவர்களுக்குமே இது அதிர்ச்சிதானாம்!
அதிமுக தொண்டர்கள் நிலை
ஜெயலலிதா இருந்தவரை சசிகலாவை தவிர வேறு யாரும் கட்சி விவகாரத்தில் தலையிடுவதே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியே கலகலத்துப் போயுள்ளது. இதனால்தான் யார் யாரோ நம்ம கட்சியின் எம்.பி.யின் யார் என்பதை தீர்மானித்து பரிந்துரைக்கு வருகிறார்கள் என அதிமுக தொண்டர்கள் புலம்புகின்றனர்.
கோகுல இந்திராவின் இடைவிடாத நன்றி
இந்நிலையில் கோகுல இந்திரா விவகாரம் குறித்து அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் விவாதித்துள்ளனர். பாஜகவுக்காக ஆடிட்டர் குருமூர்த்தி தலையிட்டார்.. இப்போது ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக டாக்டர் தலையிடுகிறார்... இது கட்சியா? இல்லை கம்பெனியா? என அந்த கூட்டத்தில் காரசாரமாகவும் விவாதித்துள்ளனர். மேலும் தமக்காக. தம்முடைய அந்தஸ்தை பற்றியும் கவலைப்படாமல் பரிந்துரைத்த அந்த விவிவிஐபி டாக்டருக்கு இடைவிடாமல் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாராம் கோகுல இந்திரா.
ஆடும்வரை ஆட்டம்! கூடும்வரை கூட்டம்!