கிச்சன் கேபினட் மூலம் ராஜ்யசபா எம்.பியாக துடிக்கும் திமுக வக்கீல்
சென்னை: திமுகவில் உழைப்புக்கு மரியாதை என்பது மலையேறிவிட்ட காலம். லாபிகள் மூலமும் கோடிகள் மூலமும்தான் அதிகாரத்துக்கு வர முடியும் என்பது எழுதப்படாத கட்சி விதி.
கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் திமுகவில் அதிகார மண்டலங்கள் நிறையவே வலம் வந்தன. காலப்போக்கில் கருணாநிதியே அதை ஸ்டாலின் என்கிற ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கி வைத்துவிட்டு காலமானார்.
திமுக என்றால் ஸ்டாலின்தான் என்கிற நிலைமை இப்போது. அதனால் காட்சிகளும் காலங்களும் மாறிவிட்டனவா என்ன ? இல்லையே.. கிச்சன் கேபினட் முடிவெடுத்தால் அதை நிறைவேற்றியாக வேண்டியதுதான் ஸ்டாலின் கடமை.
திமுக ஜெயிச்சதுக்கு உதயநிதிதான் காரணமா? இதெல்லாம் எவ்வளவு அசிங்கம்? புகைச்சலில் சீனியர்கள்
கிச்சன் கேபினட்
அதனால்தான் கிச்சன் கேபினட்டை நோக்கி ‘காவடி' எடுக்கின்றனர் பதவியும் அதிகார மோகமும் கொண்டவர்கள். கட்சிப் பதவியை தக்க வைக்க வேண்டுமா? கிச்சன் கேபினட்டுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்.. பிரச்சனை இல்லை. இந்த வரிசையில் வக்கீல் ஒருவரும் இணைந்துள்ளராம்.
3-வது சீட் யாருக்கு?
திமுகவின் 3-வது ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பு. வைகோவுக்கும் மன்மோகன்சிங்குக்கும் தாரை வார்த்த பின்னர் கட்சிக்காக உழைத்த ஒருவருக்கு அப்பதவி கிடைக்க வேண்டும் என்பது பெருவாரியான திமுகவினர் விருப்பம்.
திடீர் முயற்சி
ஆனால் திமுகவில்தான் இப்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறதே.. அதனால்தான் திடீரென லைம் லைட்டுக்கு வந்த அந்த வக்கீல் டெல்லிக்கு வண்டியேற துடியாய் துடிக்கிறாராம். திமுக எத்தனையோ நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறது... அதில் வென்றும் தோற்றும் இருக்கிறது..
ராஜ்யசபா எம்.பி நம்பிக்கை
அதெல்லாம் அரசியலில் சகஜம்தான். ஆனால் கட்சிக்கான மிக முக்கிய வழக்கு ஒன்றில் வெற்றி பெற்றதை வைத்துக் கொண்டு அந்த வக்கீல் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு வலம் வருகிறாராம். சீனியர்கள் அடங்கிக் கிடக்க, நானே சாதித்து காட்டினேன் என சட்டாம்பிள்ளைத்தனமாக பேசி வருகிறார். அந்த ஒற்றை காரணத்துக்காகவே தம்மை எம்.பி.யாக்குவார்கள் எனவும் மலைபோல நம்பிக் கிடக்கிறாராம். இதனால் ராஜ்யசபா சீட்டுக்காக கிச்சன் கேபினட் மூலமாக படுமும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த வக்கீல்.