ஆஹான்.. சமாதான முயற்சிகளா? அதிமுகவை பரபரக்க வைத்த சசிகலா அண்ட் கோவின் 'சென்னை நைட் மீட்டிங்'
சென்னை: சசிகலா தமிழகம் வருவதாக தினகரன் அறிவித்துக் கொண்டிருக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் அதிமுக தலைமையை சென்னையில் நேற்று இரவு சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே மாட்டோம் என்பது திட்டவட்டமான அறிவிப்பு. சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தினமும் வாடிக்கையாகி வருகிற ஒன்று.
ஆனால் சில கேள்விகளுக்கு மட்டும் எப்போதும் யாரும் விடைசொன்னதும் இல்லை. சசிகலாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார்களா? சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவர் கட்சியை உரிமை கோர முடியுமா? என்பதுதான் அதில் சில.
அதேபோல் சசிகலா குடும்பமே வேண்டாம்; ஒதுக்கி வைத்துவிட்டோம் என அறிவித்து கொண்டே இருந்தாலும் சசிகலா குடும்பத்தின் மிடாஸ் நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்குமான வர்த்தக உறவு முற்றிலுமாக நின்றா போனது? மிடாஸ் சப்ளையை தமிழக அரசு நிறுத்தியாவிட்டது? என்கிற கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை. எவரிடம் இருந்தும் பதிலும் வரவில்லை. அதனால் சசிகலா எதிர்ப்பு என்பதன் பின்னணியில் வேறு இருக்கலாம் என்றே கூறப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில்தான் அதிமுகவின் அதிமுக்கிய தலைமையை சசிகலா குடும்பத்தின் வாரிசு சென்னையில் நேற்று இரவு சந்தித்து சிலபல விஷயங்களை பேசியிருக்கிறாராம். இந்த சந்திப்பு என்பதே சமாதான முயற்சிகள், அடுத்து என்ன நடக்கும்? அடுத்து யார் யார் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விஷயங்களுக்காக நடந்ததுதானாம். பெங்களூரு ரிசாட்டில் இருந்து கிடைத்த உத்தரவை தொடர்ந்தே சந்திப்பு நடந்திருக்கிறதாம்.
இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை விவரங்கள் பெங்களூரு ரிசார்ட்டுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. இன்று காலை தினகரன் வெளியிட்ட அறிக்கையை நன்றாக ஊன்றிப் படித்து பாருங்கள்.. சென்னை நைட் சந்திப்பின் எதிரொலி பல இடங்களில் தெரியும் என கமுக்கமாக சிரிக்கின்றனர் அமமுக நிர்வாகிகள்.