வாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்?
Recommended Video
சென்னை: வாரிசு அரசியல் என்பது பொதுமக்களால் மட்டுமே அல்ல சொந்த கட்சியினராலே முகம் சுளிக்க வைக்கிற ஒரு விவகாரம் என்பதை ராஷ்டிரிய ஜனதா தள், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் அதிமுகவின் நடந்து வரும் கூத்துகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. இதற்குப் பின்னரும் நடிகர் உதயநிதியை மகன் என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்துவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகன் என்றபோதும் மு.க.ஸ்டாலினுக்கு எந்த ஒரு பதவியும் உடனுக்குடன் வழங்கப்படவில்லை. கட்சிக்காக உழைத்து காட்டி ஒவ்வொரு கட்டமாகத்தான் ஒவ்வொரு பதவியையும் ஸ்டாலின் பெற்றார்.
கருணாநிதி மறைந்த பின்னர்தான் ஸ்டாலினால் கட்சித் தலைவராகவும் முடிந்தது. ஆனால் தன் மகன் உதயநிதி விவகாரத்தில் ஸ்டாலின் இந்த நிதானத்தை கடைபிடிக்கவில்லை.
நடிகர் உதயநிதிக்கு கட்சி பதவி
உதயநிதியை உடனே கட்சியின் முக்கிய பொறுப்புக்கு கொண்டுவர விரும்புகிறார். இதனால்தான் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு உதயநிதிக்கு இளைஞரணி பதவி தர கோரி மாவட்ட கழகங்கள் தீர்மானம் போட்டன.
உதயநிதிக்கு பதவியா?
உதயநிதியை கட்சியில் வலிந்து திணிப்பதை திமுக நலம்விரும்பிகள் பெரும்பாலானோர் நிராகரித்தனர், அப்படி வாரிசுகளை தொண்டர்கள் மீது திணித்ததால் என்ன நடந்திருக்கிறது என்பதை ஸ்டாலின் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்து.
எங்கே போனார் லாலு மகன்?
சமூக நீதியை பேசிய லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை நம்பாமல் மகன் தேஜஸ்வியை நம்பி கட்சியை ஒப்படைத்தார் லாலு. விளைவு, லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அதனால் தலைகாட்டவே முடியாமல் 1 மாதமாக தலைமறைவாக தேஜஸ்வி இருக்கும் சூழ்நிலை. இப்போது கட்சி தலைவரையே காணவில்லை என போலீசுக்கு போகப் போகிறார்களாம்.
டிர்எஸ்-ல் கலகக் குரல்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் முதல்வர் சந்திரசேகராவ் மகள் கவிதாவை கட்சியில் திணித்தார். ஒருகட்டம் வரை ஏற்ற பொதுமக்கள் சொந்த தொகுதியிலேயே தோற்கடித்துள்ளனர்.
ஓபிஎஸ் மகனுக்காக மல்லுக்கட்டு
அதிமுகவில் மகன் ரவீந்தரநாத்துக்கு அமைச்சர் பதவி கேட்டு ஓபிஎஸ் களமிறங்கினார். இதற்கு மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் அதிமுக உடையும் நிலைக்குப் போய்விட்டது.
தெலுங்குதேசத்தில் பிளவு
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் பொதுச்செயலராக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். தற்போது தேர்தலில் படுதோல்வி ஏற்பட்ட நிலையில் லோகேஷ் மீதான அதிருப்தியில் இருப்பவர்கள் பாஜக பக்கம் தப்பி ஓடுகின்றனர்.
கட்டி காப்பாரா ஸ்டாலின்?
இத்தனை சம்பவங்களையும் மு.க.ஸ்டாலின் உள்வாங்கிக் கொண்டு மகன், மருமகன், கிச்சன் கேபினட் ஆகியவற்றுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை மட்டுமே கொடுத்தால் போதும்.. திமுக தப்பும்.... இல்லையெனில் 50 ஆண்டுகால கருணாநிதி கட்டிக்காத்த கட்சி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என புதுமுகங்களின் முகாம்களில் கரைந்து போய்விடும் என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.