2018.. சிறுநீர் பாசனம்.. எய்ட்ஸ் மருத்துவமனை.. பிரதமர் நரசிம்மராவ்.. உளறி கொட்டிய அரசியல்வாதிகள்
சென்னை: 2018-ஆம் ஆண்டு எத்தனை சம்பவங்கள் வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் இத்தனை பரபரப்பு ஏற்பட்டதா என கேட்டால் சற்று சந்தேகம்தான். ஆனால் அரசியல்வாதிகள் உளறிக் கொட்டிய பேச்சுக்கு எவ்வுமே மவுசு உண்டுதான்.
அந்த வகையில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செல்லூர் ராஜூ, பாஜக மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதுபோல் இவர்கள் எப்போது உளறி கொட்டுவார்கள் என காத்து கொண்டிருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
முதலில் செல்லூர் ராஜூவே பார்ப்போம். இவரது ஒவ்வொரு பேட்டியிலும் ஏதேனும் சர்ச்சை நிச்சயம் இருக்கும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வந்த போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு அண்டவே அண்டாது என்றார்.
எய்ட்ஸ் மருத்துவமனை
இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்புகையில் முதல்வர் எத்தனையோ திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்துள்ளார். பல திட்டங்கள் இங்கு வந்துள்ளது. அந்த மாதிரி திட்டங்களில் மதுரையில் "எய்ட்ஸ் மருத்துவமனை'' நாம் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் ரூ.1,500 கோடியில் அமைய இருக்கிறது" என்றார்.
திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு முறை வேடசந்தூரில் லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது கரூருக்கு வரும் தம்பிதுரை இங்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து விட்டு பின்னர் இரவு பார்த்தால் இன்னொரு ஊரில் நலத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் காலையில் டெல்லி சென்றுவிட்டு அங்கு பிரதமர் நரசிம்மராவுடன் பேசி கொண்டிருப்பார் என்று கூறி பகீர் கிளப்பினார்.
விமானம் மூலம் மின்கம்பங்கள் நடுதல்
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனால் அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகாப்டரில் சென்று மின்கம்பங்களை நடுவதை பார்த்துள்ளோம். அதெப்படி விமானத்தில் சென்று அவ்வாறு செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது.
சிறுநீர்
அப்போது சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 332 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறினார். அதனை சொட்டு நீர் பாசனம் என்று கூறாமல் எச் ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவில் தேவாயலம் அருகே மேடை அமைக்க போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். அப்போது போலீஸிடம் வாக்குவாதம் செய்த எச் ராஜாவிடம், பிற சமூக வழிப்பாட்டு தலங்களின் அருகே மேடை அமைக்கக் கூடாது என்பது ஹைகோர்ட்டின் உத்தரவு என தெரிவித்தனர். அதற்கு அவரா ஹைகோர்ட்டாவது ---------வது என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.