அனைவர் வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்... மக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து..!
சென்னை: மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
தீபாவளித் திருநாள், உலகத்தில் உள்ள தீய செயல்களைப் போக்கி, நற்செயல்களை நிலை நாட்டுவதனை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் உலகெங்கிலும் வாழும் மக்கள் பலராலும் இத்திருநாள் ஜாதி, மத, பேதமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
இத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதே போன்று மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
சாதி மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டுமென்று இந்த தீபாவளி திருநாளில் இறைவனை வேண்டுகிறேன். குறைந்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று முழுவதும் அழிந்து போக ஒளி ஏற்றுவோம். கொண்டாட்டங்களால் நோய் தொற்று பரவாமல் பாதுகாத்து கொள்வது ஒவ்வொருவருடைய கடமை. தகுந்த கட்டுப்பாடுகளோடும், பாதுகாப்போடும் தீபாவளி திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துகிறோம்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்த வாழ்த்துச் செய்தியில்; நாம் ஒவ்வொருவரும் புதிய நம்பிக்கையோடு எழுவோம்; நம்முடைய தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமூகமும் பயன் பெறுகிற வகையில் வெல்வோம். அத்தகைய வெற்றிகளைக் குவிப்பதற்கு தீப ஒளித்திருநாள் வழிகாட்டட்டும் எனக் கூறியுள்ளார்.