தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்... தமிழக ஆளுநர், முதல்வர், ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாப்படும் நிலையில் தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியும் செழிப்பையும் தர வாழ்த்துவதாக தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழர் திருநாள்" என போற்றப்படும் தனிச்சிறப்பு மிக்க பொங்கல் பெருவிழாவை உலகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள், என்றைக்கும் உங்களின் நம்பிக்கைக்குரிய அன்பு சகோதரர்களாகவே உங்களுக்காக உழைப்போம்" என்று தெரிவித்துள்ளார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துக்கள். இயற்கையையும், பிற உயிரினங்களையும் காப்போம்; வள்ளுவமே நம் தமிழ்நெறி என முழங்குவோம் என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தை முதல் நாளில் 'பொங்கலோ...பொங்கல்' என்று சொல்லி பூரிப்படையும் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கட்டும். தமிழகத்திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும்" என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு குழு- உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு- நாளை விசாரணை
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தியில். நேற்றைய மன வருத்தங்களை, சண்டை சச்சரவுகளை இன்றும் தொடராமல் உறவுகள் தங்களுக்குள் இணக்கமாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொங்கல் பண்டிகை உணர்த்துவதும் அதுதான். நேற்றுவரை இருந்த பழைய பொருட்களை கழித்துவிட்டு புது வாழ்வு துவங்குவதை தான் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று பொங்கல் பண்டிகை உணர்த்துகிறது.
பழைய பொருட்கள் மற்றும் துணிமணிகளை மட்டும் களைவதல்ல அதன் அர்த்தம். சென்ற ஆண்டில் நாம் சந்தித்த சங்கடங்களை, உறவுகளுக்குள் நடந்த பிணக்குகளை, செய்த தவறுகளை மன்னித்தும், மன்னிப்பு கேட்டும் புது வாழ்க்கையை தொடங்கும் பொங்கலாக இந்த பொங்கல் அமைய வேண்டும். தொடர்ந்து பிரச்சினைகளையே சந்தித்து கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு நல்லதொரு வாழ்வு மலர வேண்டுமென்று இந்த பொங்கல் தினத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் 'தை' பிறந்தால் வழி பிறக்கும்"" என்னும் தமிழ்ச் சொல்லடையே, தைத் திங்கள் முதல்தான் தமிழ்ப் புத்தாண்டு பூக்கிறது என்பதற்குரிய உள்ளுரைச் சான்றாகும். புத்தாண்டில் தைத் திங்களில் தமிழகத்தவர் பொங்கல் கொண்டாடும் பொன்னான பண்பாடு மிகவும் தொன்மையானது. புது நெல் குத்தி, அரிசிச் சோறு சமைத்துத் தாம் உண்ணுவதோடு, காட்டைக் கழனியாக்கியதில் பெரும் பங்காற்றும் மாடுகள் - காளைகள் - மக்களின் உண்மையான செல்வங்கள் இன்புற்றிருக்கும் வகையில் அவைகளுக்கு பொங்கல் தந்து பூரிக்கும் தமிழர்ப் பண்பாடே தலைசிறந்த பண்பாடுதான் என்று வாழ்த்தி உள்ளார்.