தேசத்தை திரும்பி பார்க்க வைத்த தலைவர்கள்... 2019-ம் ஆண்டின் டாப் லிஸ்ட்
சென்னை: கடந்த ஓராண்டில் தேசத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அரசியல் தலைவர்கள் ஏராளம். அவர்களை பற்றிய பட்டியலை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
தேர்தல் வெற்றி, மக்கள் செல்வாக்கு, எதிர்ப்பு, என பலத்தரப்பட்ட காரணங்களை மையமாக வைத்து பல அரசியல் கட்சிகளும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மோடி, அமித்ஷா, ராகுல் தொடங்கி குமாரசாமி, மு.க.ஸ்டாலின், ஜெகன் மோகன் ரெட்டி, துஷ்யந்த சவுதாலா, என அந்தப் பட்டியலில் இறுதியாக இணைந்திருக்கிறார் ஹேமந்த் சோரன்.
2-வது முறை பிரதமர்
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் 2-வது முறையாக பிரதமரானார் மோடி. இது தேசத்தை மட்டுமல்லாமல் உலக நாடுகளின் கவனத்தையே ஈர்த்தது. அதைத் தொடர்ந்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என டாப் கியரில் சென்றார் மோடி.
நேரடி அதிகாரம்
பாஜக தலைவராக மட்டுமே இருந்த அமித்ஷா கடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உள்துறை அமைச்சராக பதவியேற்றார். அதுவரை திரைமறைவில் இயக்கிக்கொண்டிருந்த அமித்ஷா நேரடி அதிகாரத்திற்கு வந்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது. இதையடுத்து பாஜக கொள்கைப்படி அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், ஜே.பி. நட்டாவை செயல் தலைவராக்கி இன்றும் கட்சித் தலைமை பதவியை தன் வசம் வைத்திருக்கிறார்.
காங்.தோல்வி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். இது காங்கிரஸ் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உலுக்கிவிட்டது என்றே கூறலாம். எவ்வளவு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தாம் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறார் ராகுல். இதனால் வேறு வழியின்றி சோனியா காங்கிரஸின் இடைக்கால தலைவராக உள்ளார்.
இளம் தலைவர்
ஆந்திராவில் வலிமை மிக்க தெலுங்கு தேசம் கட்சியை ஆட்டம் காணவைத்து அரியணையில் ஏறினார் ஜெகன் மோகன் ரெட்டி. அதுவும் அறுதிப்பெரும்பான்மையோடு அவர் பெற்ற வெற்றி ஒட்டுமொத்த தேசத்தைத்தை ஆந்திரா பக்கம் திருப்பியது. சட்டமன்றம் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலும் ஜெகன் கட்சியே கொடி கட்டிப் பறக்கிறது.
திருப்புமுனை
கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தனது தலைமையில் தனியாக சந்தித்த முதல் தேர்தல் 2019 மக்களவைத் தேர்தல். அதில் அவரது பிரச்சாரமும், செயல்பாடும் மக்களை பெரியளவில் கவர்ந்ததோடு திமுக கூட்டணிக்கு 39 எம்.பி.க்களையும் தந்தது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் தமிழகத்தில் திமுக வெற்றிபெறச் செய்து திரும்பி பார்க்க வைத்தார் ஸ்டாலின்.
ஆட்டம் முடிவு
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பியது பாஜக. இதனிடையே ராஜினாமா செய்வதற்கு முன்பாக, சுமார் இரண்டு வார காலம் பாஜகவுக்கு தண்ணீர் காட்டிய குமாரசாமி அதன் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார்.
106 நாட்கள்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் 106 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ.அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்ட விதமும், அவருக்கு ஜாமின் கிடைக்காத நிலையும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.
துணை முதல்வர்
ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்ததால் அங்கு துஷ்யந்த் சவுதாலாவுன் உதவியை நாடியது பாஜக. இந்த துஷ்யந்த சவுதாலா கிங் மேக்கராக திகழ்ந்து தேசிய அளவில் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பாஜகவுக்கு அளித்ததுடன் ஹரியானா மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றார் இந்த 31 வயது இளைஞர்.
சாணக்கியத்தனம்
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதை தவிர்ப்பதற்காக கற்பனைக்கு கூட எட்டாத வகையில் புதிய கூட்டணியை உருவாக்கினார் சரத்பவார். சாணக்கியத்தனமான அவரது முடிவால் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒருங்கிணைந்து பாஜகவை ஓரம்கட்டியது. மேலும், அஜித்பவார் பாஜக ஆட்சி அமைக்க உதவ இருந்த தகவல் முன்கூட்டியே தெரிந்தும், அதை கண்டுகொள்ளாமல் விட்டுப்பிடித்து உத்தவை உறுதியான முதல்வராக ஆக்கியுள்ளார்.
44 வயதில் முதல்வர்
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி முதல்வராக பதவியேற்க உள்ளார் 44 வயது ஹேமந்த் சோரன். பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் விதமாக அக்கட்சியின் முதல்வர் ரகுபர் தாஸின் செயல்பாடுகள் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களை சந்தித்து பரப்புரை செய்ததன் விளைவு இன்று அனைவரின் கவனத்தை ஈர்த்து 2-வது முறை முதல்வராகிறார் ஹேமந்த்.