விஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்
சென்னை: மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் எழுப்பியுள்ள நிலையில், அந்த விவகாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
2 மாத மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ள நிலையில், மின்வாரியம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக ஜவாஹிருல்லா சாடியுள்ளார்.
மேலும், மின் கட்டணம் மூலம் மக்களை அரசு சுரண்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
தள்ளுபடி செய்க
கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்.
குற்றச்சாட்டு
மேலும் தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை(Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும்,கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்.
இதேபோல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அதிக கட்டணம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நடவடிக்கையால் மின் நுகர்வோர்கள் முன்பைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பொது மக்களிடம் கட்டண கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.
விளக்கம்
உதாரணமாக ஒரு வீட்டின் பயன்படுத்தப்பட்ட மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் எனக் குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 எனக் கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது.
தலையிடுக
தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மக்களின் மீது கூடுதல் சுமையைச் சுமத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
சுரண்டல்
மின் நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் நிலைக்கு மின்வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களை துயரப் படுகுழியில் தள்ளக்கூடாது எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.