முக்கிய தருணங்களில் தலித் தலைவர்கள் கூட இல்லையே.. பெரிய கட்சிகள் செய்த மாபெரும் தவறு
கூட்டணி அறிவிப்புகளின்போது ஒரு தலித் உறுப்பினரும் இடம்பெறவில்லை.
Recommended Video
சென்னை: எல்லாரும் கிட்டத்தட்ட கூட்டணி பேசி முடிச்சாச்சு.. ஆனா ஒரு விஷயம் இதில் கவனித்தீர்களா? கூட்டணி அறிவிப்புகளின்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் ஒருவர்கூட நம் கண்ணில்படவில்லையே ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என இவர்களில் யாராகட்டும், கட்சியில் வலிமை வாய்ந்த மாவட்ட செயலாளர் பதவிகளிலோ, அல்லது ஆட்சியில் அதிகாரம் வாய்ந்த துறைகளிலோ தலித்துகளுக்கு போதிய வாய்ப்புகளை அளித்தனர்.
நேரடியாக வெகுஜனங்களோடு தொடர்புகொள்ளும் ஆற்றல் வாய்ந்த, ஈர்ப்பு சக்தியாக விளங்கியவர்களாக இருந்தனர். மிக முக்கியமான விவாதங்கள், அறிவிப்புகள் என்றால் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைகளை நிச்சயம் பெறுவார்கள். அல்லது அறிவிப்புகளின்போதோ அவர்களை உடன் வைத்து கொள்வார்கள்.
தலித் தலைவர்கள்
இது சாணக்கியத்தனம் என்று சொன்னாலும், அந்த நடைமுறைகள் எல்லாமே தேய்ந்து போய் வருகிறது. கடந்த 2, 3 தினங்களாக தமிழக அரசியல் பரபரப்பில் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் இறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த அறிவிப்புகளின்போது அந்தந்த கட்சியை எடுத்து கொண்டால், தலித் பிரமுகர் ஒருவர் கூட அங்கு இல்லை.
திருமாவளவன்
வழக்கமாக எப்போதுமே கண்ணில் பட்டுக் கொண்டிருக்கும் ஆ.ராசா அங்கு இல்லை. கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டிருக்கும் திருமாவளவன் இல்லாதது ஏன்? விஜயகாந்த்தை சந்திக்க பாஜக தரப்பினர் செல்லும்போதும் அவர்களுடன் தலித் சம்பந்தப்பட்டவர் ஒருவரும் இல்லை.
எப்படி ஓட்டு கேட்பார்கள்?
இதெல்லாம் எதேச்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? அல்லது இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே யாரும் நினைத்து பார்க்கவில்லையா என தெரியவில்லை. இந்த காட்சிகளை நாடே பார்த்து கொண்டுதான் இருக்கிறது. தலித் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்டு செல்ல முடியும்? இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கே முக்கியமான பதவிகளை அளித்து அவர்களை தங்கள் பக்கத்திலேயே வைத்து கொண்டுஅரசியல் செய்ததை இப்போதுள்ளவர்கள் நினைத்து பார்ப்பது அவசியம்.
அடையாளவாதம்
ஆனால் தலித்துகள் இல்லாமல் ஆட்சியையும், செல்வாக்கையும் தக்க வைத்து கொள்வது இப்போதுள்ள எந்த அரசியல் தலைவருக்கும் அழகில்லை. தலித்துகளை நோக்கிய அணுகுமுறை பெரும்பாலும் அடையாளவாதமாகவே நின்றுவிட்டது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.