இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதுதானே இப்போ பேஷன்.. ஜெயக்குமார் காட்டம்
சென்னை: இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது பேஷன் ஆகிவிட்டதாகவும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல்வேறு திகில் காட்சிகளை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவாக அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்..
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மக்கள் மனதில் என்றும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவரது நினைவுகள் உலகம் உள்ள வரை போற்றப்படும். பொதுவாக தேர்தலை பொருத்தவரை மக்கள் விரும்புவது சட்டமன்ற தேர்தல்தான். ஒரு தேர்தலுக்கு 3000 கோடி செலவாகும். 2021ல் மீண்டும் வெற்றிப்பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க வேண்டும், முதல்வர் ஆக வேண்டும் என்றும் நிறைவேறாத ஆசை உள்ளது. ஸ்டாலின் தேர்தலை விரும்பினாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. குருமூர்த்தி ஒரு பத்திரிக்கையாளராக பாஜக-அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கருத்தை கூறியுள்ளார். இது அவர் ஆசையாக இருக்கலாம். கூட்டணி குறித்து நாங்களும் விரும்ப வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூடி உரிய நேரத்தில் அதுபற்றி அறிவிக்கப்படும்.
இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது பேஷன் ஆகிவிட்டது. புழுதி வாரி தூற்றிப் பார்த்தார்கள் முடியவில்லை என்பதால் இப்போது கோடநாடு விவகாரத்தை உருவாக்கி கிளப்பிவிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல்வேறு திகில் காட்சிகளை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதிமுக தலைமை திட்டமிட்டு முடிவு செய்யும்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. எனவே அதிமுக பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின் சூடான காட்சிகள் வரும்.
கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. முதல்வருக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று சதி நடைப்பெற்று வருகிறது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.