பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மற்றொரு திருப்பம்.. மேலும் ஒரு காமுகன் அதிரடி கைது
சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளம்பெண்களை, பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த கும்பலை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது என்றும், அரசியல் தொடர்புகள், இதில் அடங்கியுள்ளன என்றும், எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் இன்று, தானும் இதுபோன்ற மிரட்டலுக்கு உள்ளாக்கியதாக பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு புகார் அளித்திருந்தார். அவரிடம் புகார் வாங்காமல், போலீசார் இழுத்தடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு இது தொடர்பாக ஒரு பேட்டி அளித்து தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக விளக்கினார்.
பொள்ளாச்சி பலாத்காரம்.. எப்.ஐ.ஆர் மாயம்
அவர் தனது பேட்டியில் குற்றஞ்சாட்டப்பட்ட வாலிபரின் பெயரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த பேட்டி வெளியான பிறகு, காவல்துறையினர் இது தொடர்பாக பாலா என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரும் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அடங்கிய கும்பலில் ஒருவர் தான் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரும் நிலையில் கைது நடவடிக்கையும் விரிவடைந்த வகையில் உள்ளது. இதனால் இந்த வழக்கு புதிய பரபரப்பை எட்டியுள்ளது.