எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா - கனிமொழி ட்வீட்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அருளானந்தம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது - மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்
திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும் மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி.
எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.