சேலம் விபச்சார கும்பல் டூ தமிழக சிலைத் திருட்டு - பிரித்து மேய்ந்த பொன் மாணிக்கவேல்!
Recommended Video
சென்னை: சேலத்தில் விபசாரத்தை ஒழித்தது முதல் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டது முதல் பொன் மாணிக்கவேல் செய்த சாதனைகள்தான் எத்தனையோ எத்தனை.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஒவ்வொரு காவல் துறை அதிகாரிக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. அந்த வகையில் பொன் மாணிக்கவேலுக்கு அதிரடி பிளஸ் அறிவு இரண்டையும் வைத்தே உண்மையை கக்க வைத்து விடுவார்.
யாராக இருந்தாலும் சரி சிறிதும் யோசிக்காமல் தனது பணியை இன்று வரை நேர்மையுடன் செய்தார் என்பதே இவரது சாதனையாகும். சிலை கடத்தல் மட்டும் அல்ல மற்ற பிரிவுகளிலும் இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. சேலத்தில் தொடங்கி சிலை கடத்தல் வரை இவர் செய்த சாதனைகளை பார்ப்போம்.
விபசாரம்
சேலத்தில் போலீஸ் எஸ்பியாக இருந்த போது அங்கு விபசாரம் கொடி கட்டி பறந்தது. இவர் பொறுப்பேற்றவுடன் சேலத்தில் பாலியல் புரோக்கர்கள் 100-க்கும் மேற்பட்டோரை விரட்டி விரட்டி பிடித்தார். மேலும் சதி வலைகளில் இந்த புரோக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமான 500-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். பின்னர் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை ஒழித்தார்.
திருட்டு சிடி
சென்னையில் போலீஸ் அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல், பர்மா பஜாரில் திருட்டு சிடியை ஒழித்தார். பின்னர் பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எதிராளி யாரென்றும் பாராமல் அதிரடிகளை காட்டினார். அது போலீஸ்காரராக இருந்தாலும் விடமாட்டார். இதுவே இவர் மீது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக இருந்துவிட்டது. பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். பிரபல கொள்ளையன் சின்னமாரி, 2 ரவுடிகள் மற்றும் 3 கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தினார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல்வேறு குற்றவாளிகளை கைது செய்ததில் இவர் சிறப்பாக பணியாற்றினார்.
ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி
ரயில்களில் அப்போதெல்லாம் ஏராளமான கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வந்தன. அவற்றை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜியாக பொறுப்பேற்று ஒழித்துக் கட்டினார். வடமாநில கொள்ளையர்களையும் விரட்டியடித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், குழந்தை கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்.
சிலை கடத்தலை தடுத்த அதிரடி மன்னன்
தமிழகத்தில் பழங்கால சிலைகள் கடத்தப்பட்டு வந்தன. இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத வேளையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கைது செய்தார். இவரிடமும் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீட்டிலிருந்தும் ஏராளமான சிலைகளை மீட்டெடுத்தார். எல்லாவற்றையும் விட 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சை பெரிய கோவில் சிலையை சிங்கப்பூரில் இருந்து மீட்டெடுத்தது என இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.