சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
சென்னை: ஓய்வு பெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை நல்லபடியாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேலை நியமித்திருந்தது.
பொன் மாணிக்கவேல், சிறப்பாக செயல்பட்டு பல சிலைகளை கண்டுபிடித்தார். அரசியல், பண பலம் ஆகியவை குறுக்கே வந்தபோதும், தீரத்தோடு, அவற்றை எதிர்த்து செயல்பட்டார்.
குட் நியூஸ்.. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. அரசிதழில் வெளியானது அறிவிப்பு
பதவிக் காலம் நீட்டிப்பு
வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட ஏராளமான பழைமையான மிக விலை உயர்ந்த கோவில் சிலைகளைக் கண்டறிந்து மீட்டு வந்தார். ஆனால், வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டி, ஓய்வு பெற்றவுடன் தமிழக அரசு இவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் இவரது பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான அவணங்களை கோர்ட்டில் சமர்பித்த பின்னர் ஓய்வு பெற்றார்.
என்ன சிகிச்சை?
இந்நிலையில், பொன் மாணிக்கவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முதல் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல பதவிகள்
1958ம் ஆண்டு பிறந்த ஐஜி பொன் மாணிக்கவேல் 1989ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெற்றார். சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் நல்ல அதிகாரி என்று பெயர் எடுத்தார்.
சிலைகள் மீட்பு
அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதை கண்டு பிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமா தேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத் தில் இருந்தும் மீட்டு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.