ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல எனக்கும் சிலர் பாஜகவின் சாயம் பூச முயற்சிக்கிறார்கள். வள்ளுவரைப் போல நானும் காவி சாயத்தில் சிக்கமாட்டேன் என்றார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்றுள்ளன. இந்நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்தது பற்றி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ரஜினிகாந்த் நல்ல மனிதர். மனப்பக்குவம் உள்ள மாமனிதர். இன்றைய ரஜினிகாந்த் என்றும் அவ்வாறே இருக்க வேண்டும். ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.
ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்லக் கூடியவர். அவருக்கு காவி சாயம் பூச வேண்டியது இல்லை. ரஜினிகாந்துக்கு காவி சாயம் பூசுவதும் பாஜகவின் வேலையும் அல்ல.
பஞ்சமி நில விவகாரத்தை திசைதிருப்பவே திருவள்ளுவர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். சென்னையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? இல்லையா? என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிக்கு நான் சிக்க மாட்டேன்.. என்ன சொல்ல வருகிறார் ரஜினிகாந்த்??