அவசரமாக ஒரு மருந்து தேவைப்பட்டது... சொந்த அனுபவத்தை பகிரும் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளரும், அமைச்சரும் சிறப்பாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யார் எந்த நேரத்தில் உதவிகள் எந்நேரத்தில் கேட்டாலும் அவர்கள் உதவி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றேன் எனவும் பொன்.ராதா கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக தனது சொந்த அனுபவங்களை ட்வீட்டரில் பதிவிட்டுள்ள இவர் அதில் கூறியிருப்பதாவது;
அரசின் 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 இலட்சம் நபர்கள் பயன்-அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு
''திருவேற்காடைச் சேர்ந்த எனது நண்பரின் மனைவி கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது சிகிச்சைக்கு அவசரமாக தேவைப்பட்ட Inj.Remdesivir 100mg என்ற மருந்து கிடைக்கவில்லை என்ற தகவல் எனக்கு கிடைக்க, நான் உடனடியாக தமிழக அரசின் சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய பாஸ்கர் ஆகியோருக்கு தகவல் அனுப்பினேன்''.
சுகாதாரத்துறைச் செயலாளர்
''உடனடியாக எனது மொபைலுக்கு தகுந்த பதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் அனுப்பினார். அதேபோல், தனது அலுவல் கூட்டத்தை முடித்து விட்டு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் அவர்களும் என்னை தொடர்பு கொண்டு,மருந்து எங்கு அனுப்பப்பட வேண்டும் என விசாரித்துக் கொண்டார்''.
ஏழை நோயாளிகளுக்கு
''இதற்கிடையே,நண்பர் அவரது முயற்சியில் மருந்து கிடைக்கப் பெற்ற தகவலை எனக்கு கூறியதால், நான் சிறிதும் தாமதமின்றி உடனடியாக அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் அவர்களை தொடர்பு கொண்டு, நோயாளிக்கு மருந்து கிடைத்து விட்ட தகவலை தெரியப்படுத்தியதுடன், நீங்கள் அனுப்ப இருந்த மருந்து வேறு ஏதேனும் ஏழை நோயாளிகளுக்கு பயன்படும் என்பதனால் தகவல் சொல்கிறேன் என்றேன்''.
பொன்.ராதா பாராட்டு
''இந்த இக்கட்டான சூழலில் நான் தொடர்பு கொண்ட மாத்திரத்தில் பதில் அனுப்பிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் ஆகியோர், இது பொன். இராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதால் மட்டும் இதை செய்யவில்லை. யார் இது போன்று உதவிகள் எந்நேரத்தில் கேட்டாலும் அவர்கள் உதவி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகிறேன்''.