2021-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி அரசு... பொன்.ராதா நம்பிக்கை
சென்னை: வரும் 2021-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணி அரசு தான் தமிழகத்தில் அமையும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் என்றும், அதில் திமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் போன்று யார் வந்தாலும் திமுக வெற்றி பெறாது என விமர்சித்தார். மக்களை பிளவுபடுத்தி 67-ல் ஆட்சிக்கு வந்ததைபோல் இப்போதும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக நினைப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் சாடினார்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக பொய் பரப்புரை செய்து இஸ்லாமியர்களையும், மாணவர்களையும் திமுக தெருவுக்கு இழுத்து விடும் வேலையில் இறங்கியுள்ளதாக சாடினார். திமுகவை இஸ்லாமியர்களும், மாணவர்களும் நம்பக்கூடாது என்றும், அந்தக் கட்சி கரையேறவைக்கும் என எண்ண வேண்டாம் எனவும் பேசினார். மாணவர்கள் வாழ்க்கை திசை திரும்பிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் சிந்திக்கவேண்டும் எனக் கூறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குடியுரிமை சட்டம் தொடர்பாக பாஜகவினர் உண்மை நிலையை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கையசைவில் மெசேஜ் அனுப்பிய விஜய்.. மறுநாளே வரித்துறை சம்மன்.. அரசியலுக்கு 'இழுக்கப்படும்' விஜய்!
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நமக்கு தொடர்பில்லாத விவகாரம் என்றும் கூறினார். மத்திய அரசுக்கு எதிராக சில விவகாரங்களை திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் பூதாகரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், அதனை மக்கள் நம்பக்கூடாது எனவும் தெரிவித்தார். இதனிடையே அந்தக் கூட்டத்தில், பாஜக புதிய தேசிய தலைவர் நட்டாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல் குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததற்காக மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.