கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை... யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்..!
சென்னை: கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி தங்களுக்கு கவலையில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் வால்கள் ஆடுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய இந்த கருத்து யாரை மனதில் வைத்து என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
அண்மைக்காலமாக அதிமுக-பாஜக இடையே கூட்டணி தொடர்பாக கருத்து யுத்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது!- தமிழக பாஜக கூத்து!
கன்னியாகுமரி இடைத்தேர்தல்
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில் மீண்டும் ஆக்டிவ் அரசியலில் இறங்கியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வசந்தகுமாரிடம் தோல்வியை தழுவியது முதல் அப்செட் மன நிலையில் இருந்து வந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். கட்சிப்பணிகளிலும் அவரது முந்தைய வேகத்தை காட்டவில்லை.
ஜூனியர்கள்
பாஜகவில் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜூனியர்கள் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதால் அவர் கட்சி நிகழ்வுகளில் தலைகாட்டுவதில்லை எனக் காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் எல்.முருகன் கடந்தவாரம் கன்னியாகுமரிக்கு சென்றபோது பொன்.ராதாகிருஷ்ணனின் மனம் குளிரும் படி நடந்துகொண்டதுடன் குமரியில் வெற்றிபெறுபவர் மத்திய அமைச்சராவார் என்ற உறுதிமொழியையும் மேடையிலேயே கொடுத்துவிட்டு திரும்பினார்.
தேர்தல் பணிகள்
இதனிடையே கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் சீட் பெற வேண்டி ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணன், மீனவ சமுதாய பிரமுகர்களுடன் முதற்கட்ட சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் தலை(மை)என்ன சொல்கிறதோ அது தான் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
சூசக விமர்சனம்
பாஜகவுடன் அதிமுக இன்னும் கூட்டணி வைக்கவில்லை என்றும் நாங்கள் என்ன மத்திய அரசில் அங்கமா வகித்திருக்கிறோம் அப்படியிருக்க அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் உள்ளதாக கூறுவது தவறு என அதிமுக எம்.பி.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா போன்றோரும் கூட்டணி தொடர்பாக தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களை மனதில் வைத்து தான் கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருப்பார் எனக் கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.