சொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்!
சென்னை: என்னுடைய சொத்துக்களை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் 37 எம்.பிக்களும் தங்களது சொத்தை விற்றாவது விவசாய கடன், கல்விக் கடனை அடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம் என்றும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றி பெற்றுள்ள எம்.பிக்கள் கர்நாடகம் சென்று, கூட்டணிக் கட்சியிடம் பேசி அணைகளைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், முதலில் பொன் ராதா அவரது சொத்துக்களை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்' என கூறியிருந்தார்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதா, திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு முதலில் அவர் தயாரா. அவர் கட்சியில் வெற்றிபெற்றவர்கள், கூட்டணி கட்சியில் வெற்றிபெற்றவர்களும் தயாரா என எல்லாரையும் கேட்டுச் சொல்லட்டும். நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன்.
அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். நான் ரெடி, என்னைக்கு வரணும், எங்க கையொப்பம் போட்டுத் தரணும் என்று சொல்லட்டும். என்றுடைய மொத்த சொத்து விவரத்தையும் தருகிறேன். நானே பேப்பருடன் வந்து எழுதி தருகிறேன், அவர்களும் வரட்டும் என்று சவால் விடுத்துள்ளார்
சபாஷ் சரியான போட்டிதான்.. மக்களுக்கு உண்மையிலேயே இதனால் நல்லது நடந்தால் அத்தனை பேரும் சேர்ந்து பேசாமல் மக்களிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களை மக்களுக்கே தந்து விடலாம். உண்மையில் இது நல்ல டீல்தான்.. பொன். ராதாகிருஷ்ணன் சவாலை தைரியமாக எதிர் கொள்ளப் போவது யாரு.. ஆவலுடன் காத்திருக்கிறது தமிழ்நாடு.