தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்
இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழர்கள் அனைவரும் இன்று உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடமே உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கடைத்தெருக்கள், சந்தைகளில் கூட்டம் நிறைந்து வழிந்தது. இன்று பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள்செடி, பூசணிக்காய் போன்றவற்றை நேற்றே வாங்கி வைத்து கொண்டனர்.
வாசலில் தோரணங்கள்
விடிகாலை முதலே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண வண்ண கோலங்களை போட்டு தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்றனர். அதேபோல விருந்தினர்களை வரவேற்கும் வகையில் வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
பொங்கலோ பொங்கல்
மக்கள் காலையிலேயே குளித்து முடித்து புத்தாடைகளை அணிந்து கொண்டனர். பிறகு புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர்.
பொங்கல் வாழ்த்து
சமைத்த உடன் பொங்கலுடன் பழங்கள், காய்கறிகள் வைத்து சூரிய பகவானை வணங்கினர். இதையடுத்து மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்
கோயில்களில் கூட்டம்
பொங்கல் பண்டிகை என்பதால், கோயில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகின்றன.