பொங்கல் பரிசாக 1000 ரூபாய் தரும் பிளான் அவுட்.. அதிமுக அடுத்து என்ன செய்ய போகிறது
சென்னை: 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்த 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசாக ரூ.1000 தருவதற்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அதிமுக அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பும் ரூ.1000 வழங்க திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
9 மாவட்டங்களில்
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்றார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார்.
பதில் அளிக்கவில்லை
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது
நாளை முதல் வழங்க
முன்னதாக இந்த ரூ.1000 பணத்தையும் பொங்கல் பரிசையும் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27ம் தேதிக்கு முன்பாக வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. அதாவது நாளை முதல் வழங்க திட்டமிட்டு இருந்ததாக ஊடகங்களில் கூட தகவல் பரவியது.
அடுத்த என்ன செய்யும்
இப்போது தேர்தல் ஆணையம் அனுமதிக்காததால் பொங்கல் பரிசு வழக்கம் போல் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்கும் என்று தெரிகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவர அதிமுக அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏன தள்ளிப்போனது
இது ஒருபுறம் எனில் ஊரக பகுதி தேர்தலில் அதிமுகவினரோ அல்லது திமுக வினரோ உள்ளாட்சி தலைவர் தேர்தலில் நின்றால் யாருக்காகவும் எந்த அரசியல் தலைவர்களும் கட்சியின் பெயரை சொல்லி ஓட்டுக்கேட்டு செல்ல இயலாது. ஏனெனில் ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் களம் இறங்க முடியாது. எனவே பொங்கல் பரிசு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தேர்தலுக்கு முன்பு கிடைத்தால் போதும் என்று ஆளும் கட்சி நினைத்திருக்க கூடும் என்கிறார்கள். எனவே பொங்கல் நெருங்கும் போதுதான் பொங்கல் பரிசு பணம் கிடைக்கும் என்று தெரிகிறது.