பொங்கல் பரிசு 2500.. எடப்பாடி வைத்த செக்.. அதிமுகவை எதிர்கொள்ள இதுதான் வழி.. திமுக அதிரடி
சென்னை: பொங்கல் பரிசு விவகாரத்தில் மிகவும் கவனத்துடன் கையாளும் திமுக, அதை தங்கள் தலைவர் முக ஸ்டாலின் தரச்சொன்னதால் தான் தமிழக அரசு தருவதாக கூறி போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள். அத்துடன் அந்த போஸ்டரில் முக ஸ்டாலின் தான் பொங்கல் பரிசாக 2500ஐ பெற்றுத்தந்துள்ளார் என்று தமிழகம் முழுவதும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த முறை ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் வழக்கம் போல் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, செங்கரும்பு, வேஷ்டி, சேலைஆகியவை வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள இந்த பொங்கல் பரிசினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாத இறுதியில் அறிவித்தார். அதற்கு திமுக தரப்பில் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
5000 தர சொன்னது
அதேநேரம் கொரோனா காலத்தில் 5000 வழங்குமாறு கூறிய போது தராத எடப்பாடியார், இப்போது தருவது தேர்தலுக்கான லஞ்சம் என்று வெளிப்படையாகவே திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். எனினும் கொரோனா காலத்தில் திமுக 5000 ரூபாய் தர சொல்லிய நிலையில், அதில் 2500ஐ இப்போது தான் அரசு தந்துள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.
கைப்பாவை அரசு
பொதுவாக , முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிப்பது திமுகவின் கொள்கையாக உள்ளது. அதேபோல் மத்தியஅரசு சொல்வதை செய்யும் கைப்பாவை போல் இருப்பதாகவும், எதிர்ப்பே இல்லாமல் சரண் அடைவதாகவும் எடப்பாடி அரசை விமர்சித்து வருகிறது திமுக.
திமுக லாவகம்
ஆனால் பொங்கல் பரிசு விவகாரத்தில் மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்ட 2500ஐ எதிர்ப்பது என்பது மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் திமுக இதை லாவகமாக கையாண்டது.
போஸ்டர் அடித்தது
எப்படி என்றால், பொங்கல் பரிசு கூப்பனை அதிமுகவினர் பொதுமக்களுக்கு தரக்கூடாது, ரேஷன் கடை ஊழியர்கள் தான் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் படியேறி சாதித்தது. இதேபோல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொடர்பான விளம்பரங்களை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் தடை பெற்றது. இப்படி அதிமுகவுக்கு செக் வைத்த திமுக, பொங்கல் பரிசை வாங்கித்தந்தே தாங்கள் என்று போஸ்டரும் அடித்து வருகிறது.
ஸ்டாலினுக்கு நன்றி
தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒட்டியுள்ள போஸ்டரில், கொரோனா பேரிடரின்போது வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.5000 கொடுக்கச் சொன்னால், கால தாமதமாக ரூ.2500 வழங்கப்படுகிறது. மகிழச்சி. அரசிடம் இருந்து 2500 ரூபாய் பெற்றுத்தந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று ஒட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இந்த போஸ்டரை ஓட்டி உள்ளார். இதேபோல் பல எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
ஸ்டாலின் கவனம்
மக்கள் வரிபணத்தில் தான் 2500 ரூபாய் தரப்படுகிறது என்றும், அதை தரச்சொன்னது ஸ்டாலின் தான் என்றும், மக்களிடையே கருத்தை பதியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தை திமுக போஸ்டர்கள் மூலம் உருவாக்க முயன்று வருவது தெளிவாக தெரிகிறது. பொங்கல் பரிசு மூலம் எடப்பாடி வைத்த செக்கை, ஸ்டாலின் லாவகமாக கையாண்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொங்கல் பரிசுக்கு தடை கேட்டு நீதிமன்ற படியேறினால், அதை அதிமுக அரசியலாக்கி திமுக தான் தரவிடாமல் செய்துவிட்டது என பழிபோடும் என்பதால் மிகவும் கவனமாக கையாண்டுள்ளார் ஸ்டாலின்.