பொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்
சென்னை: வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்கு முன்னதாக பொங்கல் பரிசு மக்கள் கைக்கு கிடைத்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல் வரும் ஆண்டிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்புதுண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு குடும்ப அட்டை தாரர்களுக்கு வரும் ஆண்டும் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கப்படும் அறிவிப்பினை கடந்த மாதம் 29ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழாவில் அறிவித்தார்.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கொள்முதல்
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி ரேசன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிப்பதற்காக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து வந்தது.
செவ்வாய் நிறைவு
இவற்றை கொள்முதல் செய்யும் பணி முடிந்து விட்ட நிலையில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக பாக்கெட் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் செவ்வாய்கிழமை முடியும் என்று சொல்கிறார்கள்.
கூட்டுறவு வங்கி
இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயாராக உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பினை வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
பொங்கல் பரிசு
அதன்பிறகு பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிட வாய்ப்பு உள்ளதாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
தடை இல்லை
எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம்- பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேஷன் கடைகளில் எழுதி ஒட்டி வைக்கப்பட உள்ளதாம். இதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் வாங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாம். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
உங்கள் கையில் ஆயிரம்
ஏனெனில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஏற்கனவே இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துவிட்டதால் தடைகள் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தேர்தலுக்கு முன்பே கைக்கு கட்டாயம் வர வாய்ப்பு உள்ளது.