3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்
சென்னை: பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும்.
அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உற்சாக கொண்டாட்டம்
தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை சிறப்பித்து கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பொழுபோக்குகாக திரைப்படங்களுக்கு செல்பவர்களை விட, டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்களே அதிகமாக உள்ளது தெரிகிறது.
டாஸ்மாக் எதிர்பார்ப்பு
இந்தாண்டு புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. இருப்பினும், கடந்தாண்டை காட்டிலும் இந்த பொங்கலுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.
மதுவிற்பனை அதிகரிப்பு
பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் 500 கோடியை தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 நாட்கள் தொடர் விடுமுறை
மேலும், இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே தங்களின் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலேயே குடிமகன்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதுவும் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.