தமிழகத்தின் பெருமை.. பொங்கல் நன்னாள்... தமிழர்களின் இதயம் மகிழும் இன்பத் திருநாள்
சென்னை: உலகெங்கும் வாழும் தமிழர்களால் குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் விழாவை தை முதல் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
ஏழைகளும், செல்வந்தர்களும் ஏற்றிப்போற்றிடும் வண்ணம் உழவர் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுப்பானையில் பொங்கலிட்டு, வெல்லமும், ஏலமும், பாலும் கலந்து உலை பொங்கிவரும் வேளையில் உணர்ச்சி பொங்க ''பொங்கலோ பொங்கல்'' என அனைவருமாய் சேர்ந்து குரலெழுப்பி மகிழ்கிறோம்.
குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது போலீஸ் வழக்கு
நம்பிக்கை
பொங்கல் தினத்தில் பால் பொங்குவதை காண்போர் காலமெல்லாம் வளவாழ்வு பெற்று, வறுமை நீங்கி வாழ்வார்கள் என்பது வழிவழியாக வந்த நம்பிக்கையாக உள்ளது. கிராமங்கள் தோறும் கும்மியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், என பொழுதுபோக்கு நிகழ்வுகள் களைக்கட்டும். கதிரவனுக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி பாராட்டி போற்றி வணங்கிடும் வண்ணமயமான நிகழ்வு அரங்கேறும்.
குடி உயரும்
வரப்புயர நீருயரும்.. நீருயர நெல்லுயரும்.. நெல்லுயர குடியுயரும்.. என உழவுத்தொழிலை பற்றி கூறி சிறப்பித்திருக்கிறார் ஒளவையார். இத்தகைய பெருமைக்கு உரிய உழவுத் தொழிலை கொண்டுள்ள உழவர்கள், அறுவடைத் திருநாளாக பொங்கலை கொண்டாடி அக மகிழ்கின்றனர். மேலும், பொங்கல் நன்னாளன்று செந்நெல்லும், செங்கரும்பும், செவ்வாழையும், மஞ்சள் கொத்தும் வைத்து மனம் மகிழ கொண்டாடி தீர்க்கின்றனர் விவசாயிகள்.
தமிழர்கள்
தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட சமயம் ஒரு தடை இல்லை, இயற்கையோடு இயைந்த மனித நேயப்பண்பு கொண்ட எல்லோராலும் இந்த நன்னாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பழம் பெருமையையும், பழம் பெரும் பண்பாட்டையும் தழைத்தோங்கச் செய்திடும் வகையில் பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன.
பெருவிழா
பொங்கல் என்பதை வெறும் பண்டிகையாக மட்டும் தமிழர்கள் பார்ப்பதில்லை. தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும், உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள வழிவகை செய்யும் பெருவிழாவாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கலை மட்டும் ஊருடனும், உறவுகளுடனும் இணைந்து கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர் தமிழர்கள்.