குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி
சென்னை: ஆன்மிக சொற்பொழிவாளரும், தமிழ் ஆர்வலருமான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இயங்கி வரும் ''திருவண்ணாமலை ஆதினம்'' மடத்தின் தலைவராக இருப்பவர் பொன்னம்பல அடிகளார். தமிழகமெங்கும் சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் தமிழ் ஆர்வலரும் கூட. தமிழ் மொழிக்காக, சமயத்துக்காக, சமுதாயத்துக்காக என பல்வேறு வழிகளில் சேவையாற்றி வரும் பொன்னம்பல அடிகளார் திருக்குறள் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக திருவண்ணாமலை ஆதின வட்டாரத்தில் கேட்டபோது, ஐயாவுக்கு ஒன்றுமில்லை, சின்ன செக் அப் தான் என்பதோடு முடித்துக்கொண்டனர். மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.
பொன்னம்பல அடிகளாருக்கு தமிழ்ச்செம்மல் விருது, முத்தமிழ் பேரறிஞர் விருது, மனித நேய பண்பாளர் விருது என பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், மதங்களை கடந்து அவருக்கு உள்ள நண்பர்கள் என அனைவரும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.