பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருப்பதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளதால் நீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏரிகளில் தண்ணீர் மட்டம் மளமளவென உயரத் தொடங்கியது. கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. அதிதீவிர புயலாக நிவர் கரையை கடந்தது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள், நீர்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திறக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.
இன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..!
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளதால் நீர் வெளியேற்றப்படுவதாகவும், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரி சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தில் 2573 டி.எம்.சி. திறன் கொண்ட நீரை சேமித்து வைப்பதற்கும் பூண்டி ஏரி கட்டப்பட்டது.