அம்மா நினைவிடத்தில் ஒரு முழம் பூ வைக்கக்கூடாதா?.. வருத்தப்பட்ட பூங்குன்றன்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக பூங்குன்றன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது நினைவிடம் முறையாக பரமரிக்கப்படுவதில்லை என்கிற பொருள்படும் வகையில் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது...
அம்மா நினைவிடத்தில் கட்டுமான பணி நடக்கிற காரணத்தால் பார்வையாளர் அனுமதிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமாதியில் ஒரு பூ கூட வைக்காமல் இருப்பது வருத்தமே... பார்வையாளர் அனுமதி இல்லாததால், பூ அலங்காரம் கூட வேண்டாம். ஒரு முழம் பூவாவது வைக்கலாமே!
பதிவை பார்த்தவுடன் யாரையும் வசைபாட வேண்டாம். அம்மா நம் அனைவருக்கும் தெய்வம். தொண்டர்களின் தாய். இது நம் அனைவரின் கடமை என பூங்குன்றன் கூறியுள்ளார்.
மேலும், கருணாநிதி மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் கூட அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அவ்வப்போது அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் ஜெயலலிதா நினைவிடம் அப்படியில்லை. இதையெல்லாம் மனதில் வைத்து ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த போயஸ்கார்டன் பூங்குன்றன் தனது வருத்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இந்தப் பதிவை பின்னர் பூங்குன்றன் எடுத்து விட்டார்.