பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காதாம்.. அதிமுக எம்பி அதிர்ச்சி பேச்சு!
சென்னை: ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் ,டீசலை வாங்கி பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் அவர்களை இந்த விலை உயர்வு பாதிக்காது என்று அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டவாது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சி பொறுப்பு வந்துள்ளது. இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் அவர் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தாலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் மற்றும் பெட்ரோல் டீசல் மீதான வரி ஆகியவற்றை உயர்த்தி அறிவித்துள்ளார. பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்துவதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க முடியும் என அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பட்ஜெ குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.பி.நவநீத கிருஷ்ணன் "இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறப்பான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை பயன்படுத்த மாட்டார்கள். அதனால் பெட்ரோல் உயர்வு என்பது அவர்களை பாதிக்காது.
அனைவருக்கும் வீடு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது சில்லரை வியாபாரிகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்து இருப்பதை வரவேற்கிறேன்.
குறிப்பாக தமிழர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டை கொண்டாட வேண்டும். ஏனென்றால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது புறநானூறு சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தது வரவேற்கத்தக்க ஒன்று" என பாராட்டி உள்ளார்.