போராட்டத்திற்கு நிதி... குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா...? பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சவால்
சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி செய்ததாக எழுந்த புகாரை அந்த அமைப்பு அடியோடு மறுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டுபவர்கள் அதை நிரூபிக்கத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், மலிவான பிரச்சாரங்களுக்கு அஞ்சி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பணிந்துவிடாது எனவும் அவர் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி செய்தது என்ற புகாரை மறுப்பதாகவும், இந்த புகாருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தவே பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கணக்கில் இருந்து ரூ.120 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்ற ஒன்று என்றும், இந்த குற்றச்சாட்டை கூறும் நபர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எந்த கிளையோ அமைப்போ இல்லை என்பது வெளிப்படையானது என்றும், ஆனால் இதை தெரிந்தும் வீண் புகார்களை சிலர் கூறிவருவதாகவும் சாடியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஜம்மு காஷ்மீரில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை செயல்படுவதாக கூறுபவர்கள், அதை நிரூபிக்கத் தயாரா என்று அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவர் சவால் விடுத்துள்ளார். பெயர் குறிப்பிடாத, மலிவான பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் சக்திகளுக்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பணிந்துவிடாது என்றும், தங்கள் அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.