சூப்பர்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் பெருவாரியாக சாதித்த தமிழர்கள்
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 750 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி மெயின் தேர்வு தொடங்க உள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.
இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள்.
புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா! ஆட்சேபனை நிலத்தில் வசித்தால் மாற்று இடம்! சூப்பர் முடிவு
அக்.4ல் நடந்தது
இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே மாதம் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை தொடர்ந்து ஜூன் 5ம் தேதிக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி அக்டோபர் 4ம் தேதி கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடந்தது.
19 நாளில் ரிசல்ட்
இந்தியா முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் நடந்த தேர்வை. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 300 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் எழுதினர். தேர்வு நடந்த தேர்வு 19 நாட்களில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி வெளியிடப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in வெளியிடப்பட்டது.
எத்தனை பேர் தேர்ச்சி
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 750 பேர் வரை தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்..
சென்னையில் மட்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 11ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு அதிகம் பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரிகளாக சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.