ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய வாய்ப்பு.. பாஜக - அமமுக கூட்டணி அமைக்கப்படுமா? டிடிவி தினகரன் பதில்!
சென்னை: வரும் காலத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்த செயல்பட வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளன. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு தயாராகும் வகையில், முன்னதாக டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு.. காலம் தான் பதில் சொல்லும்.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
2021 சட்டமன்றத் தேர்தல்
இந்த நிலையில் ஓபிஎஸ் உடன் வருங்காலத்தில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில், அதிமுகவை கைப்பற்றுவதற்கான போட்டியில் நான் இல்லை. நாங்கள் தனியாக கட்சி ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகின்றன. 2021ம் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுகவை இணைக்க வேண்டும் என்று டெல்லியில் இருந்த சில நலம் விரும்பிகள் ஆசைப்பட்டனர்.
டெல்லி மேலிடம்
அப்போது முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரினேன். எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதனால் முதலமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று கூறினேன். எங்கள் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கைக்கழுவிவிட்டனர்.
ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு
2017ம் ஆண்டு சிறை செல்வதற்கு முன் ஓபிஎஸ்-க்கு அடுத்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி தான் சீனியராக இருந்தார். அதனால் தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தோம். ஆனால் அவர் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகத்தை செய்துள்ளார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்ப இயலாது. எனவே எந்த காலத்திலும் அவருடன் சேரும் எண்ணம் இல்லை.
இபிஎஸ் பற்றி கருத்து
ஓபிஎஸ்-ம் நானும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக பயணித்துள்ளோம். அவர் சசிகலாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதையும், இப்போது உணர்ந்துள்ளார். சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அந்த அளவுக்கு அவர் கொடூரராக நடந்து கொண்டார்.
அரசியலுக்காக அவர் எதையும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. இதுவரை எனக்கு வந்த தகவல்களின்படி, சசிகலாவையும் தொடர்பு கொள்ளவில்லை.
திமுக ஆட்சி
நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும் என்று கூறுவதற்கு காரணம் அமலாக்கத்துறையின் விசாரணையில் அமைச்சரக்ள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இருப்பது தான். கடந்த ஆட்சியை விடவும், இந்த ஆட்சியில் ஊழல் அதிகம் என்று கூறுகிறார்கள். அதனால் இரு தேர்தலும் ஒன்றாக நடக்கும் என்பது என் உணர்வு.
பாஜகவுடன் கூட்டணி?
2024 நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவுக்கு மிகமுக்கியமான தேர்தல். அவர்களுடன் கூட்டணி அமைப்போமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். எங்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்பட்டால், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.