அதிமுகவிலிருந்து பறக்க தயாராகும் பதவி கிடைக்காத நிர்வாகிகள்... கட்சித் தலைமைக்கு புதிய தலைவலி
சென்னை: அதிமுகவில் அண்மையில் வெளியிடப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியில் புயலைக் கிளப்பியுள்ளது.
பதவி கிடைக்காத மற்றும் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து சிறகு விரித்து பறப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்கள்.
இதனிடையே அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகள் புதிய நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் இனி மும்மொழி திட்டம். புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? மத்திய அரசு விளக்கம்
பட்டியல் வெளியீடு
அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய பட்டியல் கடந்த சனிக்கிழமை இரவு வெளியாகியது. இந்த நிர்வாகிகள் பட்டியல் அதிமுக தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதிலும் பாகுபாடுகள் உள்ளதாக அதிமுகவில் அதிருப்தி குரல்கள் ஒலிக்கின்றன.
தேர்தல் நேரம்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சிக்குள் இவ்வாறு பிரச்சனைகள் எழுவதை அதிமுக தலைமை விரும்பவில்லை. இதனால் பதவி கிடைக்காத நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே மூத்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளவர்களை நேரடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு சில பல உறுதிமொழிகளை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தாவல்
ஆனால், சமாதான பேச்சுவார்த்தையை ஏற்க விரும்பாத சிலர் திமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஏரியா மக்களிடம் ஓரளவு நற்பெயரும், பரிச்சயமும் இருக்கும் அதிமுக பிரமுகர்களை திமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகின்றன. இதனை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையிலான டீம் செய்து வருகிறது. மலைப்பிரதேச மாவட்டத்தில் கூட அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இப்படி
அதிமுகவில் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து ஒரு டீம் அதிருப்தியில் இருக்கிறதென்றால், தங்களை பொறுப்பில் இருந்து விடுவித்ததற்காக ஒரு டீம் நிம்மதி பெரு மூச்சு விடுகிறது. தேர்தல் நேரத்தில் பொறுப்பில் இருந்தால் செலவு செய்ய வேண்டும், அலைய வேண்டும், உட்கட்சி பூசலை எதிர்கொள்ள வேண்டும், ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பன உள்ளிட்ட பல சிக்கல்களில் இருந்து தப்பித்ததாக நினைக்கிறது அந்த டீம்.