20 வருடமாக கடிதங்களைத் தரும்.. போஸ்ட்மேன் வந்திருக்காரு.. ஆனால் அதைப் பெற அன்பழகன்தான் இல்லை!
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக அன்பழகனுக்கு தபால் கொண்டு வரும் தபால்காரர், இன்றும் தபால் கொண்டு வந்து அவரது உடலை பார்க்க முடியாமல் சோகத்துடன் திரும்பினார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கட்சி பணிகளில் கலந்து கொள்ளாமல் வெறும் ஆலோசனை மட்டும் வழங்கி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முக்கியஸ்தர்கள்
இத்தனை நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் இன்று அதிகாலை 1 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அன்பழகன் இறப்பு
அன்பழகனின் வீட்டுக்கு 20 ஆண்டுகளாக தபால் கொண்டு வருபவர் சிதம்பரம். அன்பழகன் அண்ணாநகர் வீட்டில் இருந்தாலும் சரி, கீழ்ப்பாக்கம் வீட்டில் இருந்தாலும் சரி சிதம்பரம்தான் அவருக்கான தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சிதம்பரத்திற்கு, க அன்பழகன் இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாலை
இதையடுத்து அவரது பெயருக்கு வந்த தபால்களையும் எடுத்துக் கொண்டு ஒரு மாலையையும் வாங்கிக் கொண்டு கீழ்ப்பாக்கம் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த நேரம் அங்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த காத்திருந்தனர். இன்னொரு வழியில் கூட்டம் குறைவாக இருந்தது. அந்த வழியில் முக்கியஸ்தர்கள் அனுப்பப்பட்டனர்.
வரிசையில் நிற்கவில்லை
வரிசையில் நின்றால் ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்பதால் அவர் போலீஸாரிடம் தன்னை வேறு வழியில் விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் போலீஸார் அதற்கு மறுத்துவிட்டனர். சாதாரண வழியில் நின்றால் ஒரு மணி நேரம் ஆகிவிடும். இதனால் பணி பாதிக்கும். மற்ற இடங்களுக்கு தபால் கொண்டு செல்வது தாமதமாகிவிடும் என்பதால் அவர் வரிசையில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
போலீஸாரிடம் மன்றாடிய தபால்காரர்
இதையடுத்து மீண்டும் போலீஸாரிடம் கேட்டார். ஆனால் அவர்கள் அவரை உள்ளே விடவில்லை. இதையடுத்து சோகமடைந்த அவர் வேறு வழியில்லாமல் மாலையையும் க அன்பழகனுக்கு வந்த கடிதங்களையும் போலீஸாரிடம் கொடுத்துவிட்டு , தன் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் சென்றார்.