திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் திடீர் மனு
சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்துமே வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு புயல் நிவாரணப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியுள்ளார்.
ஆனால் இடைத்தேர்தல் பிரச்சனையில் தலையிட முடியாது என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததுடன், இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்க தயார் என்றும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.