தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை.. அடுத்த 10 நாட்கள் பவர்கட் இருக்கும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை: தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாகச் சனிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு மின் தடை இருக்கும் என்று தெரிவித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கும் நிலை இருப்பதால் மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்று அழைக்க முடியாது என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அறிவிக்கப்படாத மின் தடை பல்வேறு பகுதிகளில் ஏற்படுவதாகப் புகார் எழுந்தன.
இது குறித்து பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
10 நாட்களுக்கு மின்தடை
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வாரிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 9 மாதங்களாக மாநிலத்தில் முறையாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே, வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ 1,33,671 கோடி கடன்
துணை மின் நிலையங்கள், பழுதடைந்த மின் பெட்டிகள், மின் கம்பங்கள் என அனைத்து பராமரிப்பு பணிகளும் முன் அறிவிப்புடன் விரைந்து போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும். மின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சொல்லப்படும். முதல்வருடன் ஆலோசனைக்குப் பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ரூ 1,33,671 கோடி கடன் உள்ளது. முதல்வரின் ஆலோசனைப்படி கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் கட்டணம் புகார்கள்
கடந்த ஆட்சியில் நடைபெற்ற மின் கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாகச் சட்டசபையில் விவாதிக்கப்படும். மாநிலம் முழுவதும் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக இதுவரை 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அந்தப் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படாது.
மின்மிகை மாநிலம் இல்லை
கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருப்பதாகக் கூறினார்கள். நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து தன்னிறைவு அடையும் போதுதான் மின்மிகை மாநிலம் எனக் கூறமுடியும். இப்பொழுதும் நாம் வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கும் நிலையில் தான் இருக்கிறோம். எனவே தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல" என்றார்.