பகலில் தண்ணீர் பிரச்சினை.. இரவில் மின்வெட்டு.. என்னதான் செய்வார்கள் சென்னைவாசிகள்?
Recommended Video
சென்னை: தண்ணீர் பிரச்சினையை தொடர்ந்து தற்போது மின்வெட்டு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.
கத்தரி வெயில் முடிந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதிலும் சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிநீருக்காக அல்லோகலப்படுகின்றனர்.
ஆண்டவன் காரணமா.. இல்லை ஆண்டவர்கள் காரணமா?.. #தவிக்கும்தமிழ்நாடு
தமிழகமே தேடி அலைகிறது
பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தூக்கத்தை இழந்து தண்ணீருக்காக தேடி அலைகின்றனர். பகல் நேரம் அல்லாது இரவு நேரங்களிலும் தண்ணீர் தேடி அலைந்தால்தான் பகல் நேரத்தில் குழந்தைகள் பள்ளிச் செல்லவும், பெரியவர்கள் வேலை செல்லவும் ஏதுவாக இருக்கும் என்பதால் தண்ணீருக்காக இரவு நேரம் என்றும் பாராமல் தமிழகமே தேடி அலைகிறது.
மின்வெட்டு
தண்ணீர் பிரச்சினை ஒருபுறம் இருக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மணிக்கணக்கில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
வெயிலில் வெம்பி தவிக்கும் மக்கள்
சில சமயங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை இயக்க முடியவில்லை. ஏற்கெனவே வெயிலில் வெம்பி தவிக்கும் மக்கள் இந்த மின்வெட்டால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கருணை
சென்னை வேளச்சேரி, வில்லிவாக்கம், சூளைமேடு, சைதாப்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சத்தால் நொந்து தவிக்கும் மக்கள் இந்த மின்வெட்டு பிரச்சினைகளால் தூக்கத்தையும் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். இன்னும் சிலர் தண்ணீர் பிரச்சினைக்காக வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு வருண பகவான் கருணை காட்டினால்தான் உண்டு.