Pongal Exclusive: பாலிவுட்டில் நடிக்க நிறைய சான்ஸ் வருது... பூரிப்பில் திளைக்கும் ஆர்த்தி அருண்!
சென்னை: பளுதூக்கும் வீராங்கனையான ஆர்த்தி அருண் தனது 40 வது வயதில் ஆசிய போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததுடன், அடுத்தக்கட்டமாக உலக பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை அண்ணாநகரில் பல் மருத்துவராக தனது பணியை தொடங்கிய இவர், பளுதூக்கும் வீராங்கனையாக மாறி இப்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைப்பது பற்றியும் சிந்தித்து வருகிறார்.
இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பொங்கல் சிறப்புப் பேட்டி வேண்டும் என சந்தித்தபோது, மனம் திறந்து பல்வேறு விவகாரங்களை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: ஒரு பளுதூக்கும் வீராங்கனையாக உங்களின் அடுத்தகட்ட இலக்கு என்ன? நீங்க நினைத்ததை சாதித்துவிட்டீர்களா?
பதில்: உலக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது வாழ்நாள் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன். தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு உலக பளுதூக்கும் போட்டி நடக்க உள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏப்ரல் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்கும் போட்டியிலும் பங்கேற்கிறேன். உலக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லும் வரை சாதித்துவிட்டதாக கூற முடியாது.
கேள்வி: இந்த போட்டிகளில் எல்லாம் பங்கேற்கும் செலவு யாருடையது... உங்கள் சொந்த பணமா இல்லை அரசாங்கம் அளிக்கும் நிதியா?
பதில்: இல்லை, இதுவரை எனக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த நிதியும் கிடைத்ததில்லை. எல்லாமே எனது சொந்தப்பணத்தை செலவழித்து தான் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். மகன் கல்லூரி படிப்பிற்கு வைத்திருந்த தொகையை செலவிட்டு தான் கனடாவில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கலந்துகொண்டேன். நிதி உதவி தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எனது விவரங்கள், அனுப்பி வைத்திருக்கிறேன். அது குறித்து பரிசீலித்து அரசு நிதி உதவி செய்தால் உதவியாக இருக்கும்.
Exclusive: தமிழ்நாட்டை ரொம்ப மிஸ் பண்றேங்க.. நெகிழும் ரோகிணி ஐ.ஏ.எஸ்.
கேள்வி: உங்களுடைய கணவர் உங்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறாரா... குடும்பத்தினர் ஆதரவு எப்படி?
பதில்: நான் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது கணவர் முழு ஒத்துழைப்பு தருவதுடன் ஊக்கப்படுத்தவும் செய்கிறார். அவரும் ஒரு பல் மருத்துவர். எனது அத்தை மகன் தான் அவர். நான் பல்பதில்மருத்துவம் படித்துக்கொண்டிருந்த போதே என்னை அவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அதன்பிறகும் படிப்பை தொடரவைத்து, எனது முயற்சிகளுக்கு கணவர் முழு ஆதரவு தருகிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகள் பள்ளி படிக்கிறாள். மகன் பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கிராபிக் டிசைனராக பயிற்சி பெற்று வருகிறார். எனது குடும்பத்தினர் ஆதரவு இருப்பதால் தான் இந்தளவு என்னால் சாதிக்க தோன்றுகிறது.
கேள்வி: சினிமாவில் நடிக்க அழைப்பு வருவதாக கூறப்படுகிறதே, உண்மையா?
பதில்: தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக இதுவரை என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. விளம்பரங்களில் நடிக்க மட்டும் அழைப்பு வந்தது, நான் நிராகரித்துவிட்டேன். ஆனால் பாலிவுட் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்தது. பாலிவுட் பிரபல இயக்குநர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி கேரக்டர் பற்றி கூறியுள்ளார். ஆனால், அது குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. உலக பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்படியிருக்க சினிமாவில் நடிக்கச் சென்று அதில் கவனம் சிதைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
கேள்வி: பளுதூக்குதல் தொடர்பான விழிப்புணர்வு போதிய அளவில் தமிழகத்தில் உள்ளதா?
Recommended Video
பதில்: தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவிலேயே பளுதூக்குதல் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்று தான் நினைக்கிறேன். தொலைக்காட்சிகள் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் இது போன்ற போட்டிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.