அப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை: அப்பா, அம்மாவை ஊட்டியில் மர்ம கும்பல் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்டு தாருங்கள் என்றும் பவர்ஸ்டார் மகள் வைஷ்ணவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் கடந்த 5-ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மனைவி புகார்
இந்நிலையில் அவரை கண்டுபிடித்துத் தருமாறு அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி ஜூலி புகார் அளித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பவரின் மனைவி ஜூலியையும் காணவில்லை என அவரது மகள் வைஷ்ணவி ஒரு புகார் அளித்துள்ளார்.
அம்மாவையும் காணவில்லை
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அப்பா பவர்ஸ்டாரை கடந்த 5-ஆம் தேதி முதல் காணவில்லை என கார் டிரைவர், அம்மா ஜூலிக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். இதையடுத்து அன்று மாலை 4 மணிக்கு அப்பாவே அம்மாவுக்கு போன் செய்து நான் உன்னை பார்க்க வேண்டும். நீ சாந்தி காலனியில் உள்ள மருத்துவமனைக்கு அருகே வா என அழைத்தார்.
வீட்டுக்கு வந்தார்
அம்மாவும் அங்கு சென்றார். அப்போது அப்பாவை பிடித்து வைத்திருந்த ஆட்கள் அம்மாவிடம் தாங்கள் போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில் , நாங்கள் உங்களை பார்த்துவிட்டோம். சொத்து குறித்து வாய்ஸ் ரெக்கார்ட் வாங்கிவிட்டு அவரை இரவு 9 மணிக்கு அனுப்பி விடுகிறோம் என்றனர். அதை நம்பிய அம்மா, வீட்டுக்கு வந்துவிட்டார்.
பத்திரம்
9 மணி ஆகியும் அப்பா வராததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டோம். ஆனால் ஸ்விட்ச் ஆப் என வந்தது. சிறிது நேரம் கழித்து அவர்களாகவே அம்மாவின் செல்போனுக்கு போன் செய்து எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவரை ஊட்டிக்கு அழைத்து செல்கிறோம். அங்கு பத்திரம் பதிவு செய்து விட்டு அனுப்புகிறோம் என்றனர்.
உடல்நிலை சரியில்லை
அதற்கு அம்மாவோ நீங்கள் போலீஸ்தானே. உங்கள் அடையாள அட்டையை தாருங்கள் என்றார். அப்போது அப்பா, அவர்கள் போலீஸ் இல்லை என்றார். பின்னர் அம்மாவுக்கு ஊட்டிக்கு விமான டிக்கெட் போட்டுக் கொடுத்தனர். அவர் அங்கு போய் சேர்ந்தவுடன் எங்களை தொடர்பு கொண்டார். அங்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போன்
அங்கிருந்த ஒருவரிடம் அம்மா போன் வாங்கி பேசினார். அப்போது என்னுடைய போனை அவர்கள் வாங்கிவிட்டனர். எனவே நாங்களாகவே உங்களுக்கு போன் செய்கிறோம் . நீங்கள் செய்யாதீர் என்றார். இதையடுத்து அம்மா, அப்பாவும் ஒரு முறை போன் செய்து நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.
போலீஸுக்கு போனேன்
நாங்கள் அதன்பிறகு அவருக்கு கால் செய்தோம். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது. அம்மா விமான நிலையத்துக்கு சென்ற போது அப்பாவை காணவில்லை என்பது குறித்த புகாரை என்னிடம் கொடுத்தார். அதை நான்தான் போலீஸிடம் கொடுத்தேன். நேற்று அம்மாவின் போனும் ஸ்விட்ச் ஆப் என வந்ததால், நான் போலீஸுக்கு போனேன்.
கடத்தல்
அவர்களும் ஊட்டிக்கு செல்ல காரை ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் போன் செய்கிறோம் என போலீஸ் தெரிவித்தனர். நாங்கள் ஏற்பாடு செய்துவிட்டோம். ஆனால் அவர்கள் இன்னும் போன் செய்யவில்லை. அப்பாவுக்கு பெங்களூரில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அப்பாவும் பணத்தை செட்டில் செய்வதாக கூறிவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் பணம் தருமாறு கேட்டு அப்பா, அம்மாவை கடத்தி விட்டதாக அப்பா கூறினார்.
மீட்டு தாருங்கள்
அப்பாவுக்கு போன் செய்தால் அந்த ஆட்கள் ஸ்பீக்கரில் போனை போடுவதால் அப்பா எதையும் தெளிவாக சொல்லவில்லை. எனவே இருவரையும் அந்த மர்ம கும்பலிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என வைஷ்ணவி கேட்டுக் கொண்டுள்ளார்.