தேர்தல் செலவுக் கணக்கு.. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கடும் வாக்குவாதம்!
சென்னை: சட்டசபை தேர்தல் செலவு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
Recommended Video
சட்டசபை அதிமுக குழு தலைவர் பதவிக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் மல்லுக்கட்டுகின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டியில் விட்டுக் கொடுத்ததால் இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்கிறார் ஓபிஎஸ்.
சட்டசபை அதிமுக குழு தலைவர் யார்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கோஷ்டிகள் பகிரங்க மோதல்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
ஆனால் முதல்வர் வேட்பாளர் நான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி உங்களுக்கா? எப்படி நியாயம் என்கிறார் ஈபிஎஸ். சென்னையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏஎக்கள் கூட்டத்தில்தான் இருவரும் இப்படி மாறி மாறி நேருக்கு நேராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யார் செலவு செய்தது?
அத்துடன், சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்தது யார்? 234 தொகுதிகளுக்கும் போய் பிரசாரம் செய்தது யார்? கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது யாரால்? இதனை எல்லாம் சிந்தித்து பார்த்துதான் அதிமுக குழு தலைவர் பதவியை கேட்கிறோம் என்றார் ஈபிஎஸ்.
செலவு செய்தது கட்சி பணம்
ஆனால் ஓபிஎஸ்ஸோ, எங்களை தோற்கடிக்கத்தானே வன்னியர் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தீங்க.. தேர்தலில் செலவு செய்தது கட்சி பணம்தானே? உங்க சொந்த பணத்தை போட்டு செலவு செய்யலைதானே? என எகிறியிருக்கிறார். ஈபிஎஸ், ஓபிஎஸ் நேருக்கு நேராக கடும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதால் எந்த முடிவும் நேற்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
வலுக்கும் ஒற்றை தலைமை குரல்
அத்துடன் கட்சிக்கு இனி இரட்டை தலைமை வேண்டாம்; ஒற்றை தலைமைதான் வேண்டும் என்கிற குரல்களும் அதிமுகவில் வெடித்துள்ளன. அந்த ஒற்றை தலைமை யார்? என்பதிலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு கோஷ்டிகள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறன. தற்போதைய நிலையில் அதிமுக சட்டசபை குழுத் தலைவர் யார் என்கிற இழுபறிக்கு முடிவு காண்பதில் அக்கட்சியின் சீனியர்கள் தீவிரமான சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஓயாத அதிகாரப் போட்டி
ஈபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன் அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறது. ஆனால் இனியும் பொறுத்திருக்க முடியாது; ஓபிஎஸ் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்க வேண்டும் என்கிறது அவரது கோஷ்டி. இதனால் அதிமுகவில் வெடித்துள்ள அதிகாரப் போட்டி இப்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.