கல்யாணத்துக்கு போவதை விட.. உசுருதான் முக்கியம்.. பாத்து சூதானமா இருங்க.. பிரதீப் கெளர் அட்வைஸ்
சென்னை: இது திருமண காலம்தான் ஆனால் அன்பானவர்களின் திருமணத்திற்கு செல்வதை விட உயிர்தானே முக்கியம், எனவே பார்த்து சூதானமா நடந்து கொள்ளுமாறு முதியவர்களுக்கு ஐஎம்சிஆர் அதிகாரி பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாதம் திருமண காலம். கொரோனாவுக்கு பிறகு திருமணத்திற்கு பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனால் பழையபடி திருமணத்தில் கலந்து கொள்ள பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
ஆனால் நிவர் புயலால் அதிக கனமழை, புயல் எச்சரிக்கை, போக்குவரத்து ரத்து உள்ளிட்ட காரணங்களால் திருமண விழாக்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
இதுகுறித்து பிரதீப் கவுர் தனது ட்விட்டரில் கூறுகையில் புயல் கரையை கடக்கும் இடத்திலிருந்து சென்னை நடுவில் உள்ளது. இது திருமண காலம். கடந்த சில நாட்களாக எனக்கு 5 அழைப்பிதழ்கள் வந்துள்ளன. அந்த 5-இல் திருமணத்தை நேரலையாக ஒளிபரப்புவது குறித்து இரு அழைப்பிதழ்களில் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அறிவுரைகள்
கொரோனா காலத்தில் இது போன்று திருமணங்களில் கலந்து கொள்ள திட்டமிட வேண்டாம். ஒரு வேளை திட்டமிட்டால் நான் சொல்லும் அறிவுரைகளை கடைப்பிடியுங்கள். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலோ அல்லது உடல் உபாதைகள் இருந்தாலோ நேராக செல்வதை தவிருங்கள்.
நேரத்தை குறையுங்கள்
ஒரு திருமண விழாவுக்கு சென்றுவிட்டு அதனால் உங்கள் உயிரை இழப்பது சரியில்லை. ஒரு வேள் நீங்கள் நிச்சயம் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால், திருமண மண்டபத்தில் கூட்டதோடு கூட்டமாக இருக்கும் நேரத்தை குறையுங்கள். எப்போதும் மாஸ்க் போட்டு கொள்ளுங்கள்.
சானிடைசர்
அதிக கூட்டம் இருக்கும் பகுதிகளில் சாப்பிடுவதை தவிருங்கள். யாரையும் கட்டிப் பிடிக்காதீர்கள். கைகளை சுத்தமாக சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்துங்கள். கும்பல் கும்பலாக அமராதீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும்போதே சென்றுவிட்டு தம்பதியை வாழ்த்துங்கள். ஒரு வேளை கூட்டம் அதிகமாக இருந்தால் குறையும் வரை வெளியே காத்திருங்கள். இது அனைத்து வயதினருக்கும் பொருந்தக் கூடிய அறிவுரை என கவுர் தெரிவித்துள்ளார்.