கடற்கரையை சுத்தம் செய்த மோடி.. அடுக்கடுக்காக எழும் கேள்விகள்.. பிரகாஷ் ராஜுக்கும் நிறைய சந்தேகம்
Recommended Video
சென்னை: கோவளம் கடற்கரையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று குப்பை கூளங்களை எடுத்து சுத்தம் செய்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், இதற்கு, ஒருசேர வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருகிறது என்பது உண்மை.
வரவேற்பு தெரிவிப்போர் சொல்லக்கூடிய காரணம்.. "இந்த காலத்தில் ஒரு கவுன்சிலர் கூட கீழே குனிந்து குப்பையை எடுத்து போடுவது கிடையாது. கவுரவ குறைச்சல் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமராக இருந்த போதும், வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு, குப்பையை கண்டதும் எடுத்து அப்புறப் படுத்துகிறார். இவரல்லவா பிரதமர்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.
இதேபோல பிரதமரின் இந்த வீடியோ, என்பது பல்வேறு விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுள்ளது. அதில் முக்கியமான ஒரு விமர்சனம், நடிகர் பிரகாஷ் ராஜுடையது.
|
பிரகாஷ்ராஜ் விமர்சனம்
பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்வியை பாருங்கள். "நமது தலைவரின் பாதுகாவலர்கள் எங்கே. ஒரு கேமராமேன் மட்டும் பின்தொடர, தனியாக பிரதமர் செல்ல எப்படி பாதுகாப்பு வீரர்கள் அனுமதித்தார்கள்?. வெளிநாட்டு குழு வந்துள்ள நிலையில் கூட அந்த இடத்தை எதற்காக சம்பந்தப்பட்ட துறையினர் துப்புரவு செய்யாமல் வைத்திருந்தனர்?" இவ்வாறு அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். பிரகாஷ்ராஜ் கேட்கும் தொனியை வைத்து அவர் எந்த அர்த்தத்தில் இவ்வாறு கேட்கிறார் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் வஞ்சப்புகழ்ச்சி அணியேதான்.
|
பல கேள்விகள்
பிரகாஷ்ராஜ் மட்டுமல்ல இணையதளத்தில், பல்வேறு நெட்டிசன்கள் பிரதமரின் இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி வருகிறார்கள். அதில் ஒருவர் கூறுகையில், பிரதமர் ஜாகிங் வருவதைக் கூட மதிக்காமல், குப்பையை, அகற்றாமல் தமிழக அரசு பணியாளர்கள் மெத்தனமாக இருந்தனரா? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
பிளாஸ்டிக் கவர்
மற்றொரு நெட்டிசன், தமிழகத்தில்தான் பாலத்தீன் பயன்படுத்தத் தடை இருக்கிறதே, அப்படியிருக்கும்போது பிளாஸ்டிக் கவரில் பிரதமர் குப்பைகளை அள்ளி போடுவதுபோல வீடியோ வெளியிட்டிருப்பது சரியான செயல்தானா? என்றும் கேள்வி எழுப்புகிறார்.
முன்னுதாரணம்
சிலரோ, கையுறை கூட அணியாமல் பிரதமர் இவ்வாறு குப்பைகளை அள்ளி போடுவது நல்ல முன்னுதாரணம் கிடையாது. இது ஆரோக்கியத்திற்கு உகந்தது கிடையாது, என்று தெரிவிக்கிறார்கள். சிலர், கேமராமேன்கள் எவ்வாறு கூடவே சென்றனர் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவேளை எதேர்ச்சையாக குப்பைகளை பார்த்து பிரதமர் அகற்றினாலும் அவரைத் தடுத்துவிட்டு, கூடவே சென்ற பாதுகாப்பு வீரர்கள் அல்லவா அதை செய்திருக்க வேண்டும் என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தூய்மை இந்தியா
ஆனால் பெரும்பாலானோருடைய கருத்து என்னவாக இருக்கிறது தெரியுமா? செல்லும் இடங்களில் எல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்த, பிரதமர் கவனம் செலுத்துகிறார். அவர் இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாக வெளிக்காட்டிக்கொள்ள இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுகிறார். ஒருவகையில் இது நாட்டு மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க வழி செய்யும். மற்றபடி பிரதமரின் உள்நோக்கம் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.