மாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்
சென்னை: மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் மத்தியில் கூட்டாட்சியை வலுப்படுத்தவும் குரல் கொடுத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புகழாரம் செலுத்தினார்.
இன்று மறைந்த முதல்வர் கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவு தினமாகும். இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:
5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த எனது 50 ஆண்டுகால நண்பர் கருணாநிதியின் நினைவுநாள் இன்று. நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.
கருணாநிதி மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் நலம் விசாரித்திருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மைவிட்டு கருணாநிதி பிரிந்து சென்றுவிட்டார். 1967-ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். நான் சென்னை வரும்போது எல்லாம் தவறாமல் கருணாநிதியை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
1969-ம் ஆண்டு அண்ணா மறைந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்காக, கூட்டாட்சி தொடர்பான கருத்தரங்கை நடத்தினார் கருணாநிதி. அதில் நானும் பங்கேற்று பேசினேன். 2009-ம் ஆண்டு நான் நிதி அமைச்சராக இருந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
வட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி
இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தமிழ் மக்களின் மீதும் தமிழகத்தின் வளர்ச்சி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் கருணாநிதி. பெரியார், அண்ணாவைத் தொடர்ந்து திராவிட இயக்க கொள்கைகளை முன்னெடுத்து சென்றவர் கருணாநிதி. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.