தமிழகத்தில் அறிமுகமாகும் 3 டி பிரச்சாரம்... பட்டிதொட்டியெங்கும் மு.க.ஸ்டாலின் ஹைடெக் பரப்புரை..!
சென்னை: தமிழகத்தில் 3 டி ஹோலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த ஹைடெக் பிரச்சார யுத்தியை திமுகவுக்காக கையில் எடுத்துகிறது ஐ-பேக் நிறுவனம்.
ஹை டெக் பிரச்சாரம்
கடந்த 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஹைடெக் பிரச்சார யுத்தியை கடைப்பிடித்தார் நரேந்திர மோடி. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இதே பிரச்சார பாணியை கையாண்டார் மோடி. அப்போது அவருக்கு விளம்பர தந்திரங்களை வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இப்போது அவர் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றி வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த யுத்தியை அறிமுகப்படுத்த உள்ளார்.
நேரடியாக செல்வது
கொரோனா காலம் என்பதால் பழையபடி பிரச்சாரங்கள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்டங்களுக்கு கட்சியினர் வருவார்களே தவிர, தற்போது நிலவும் சூழலில் பொதுமக்கள் யாரும் வரத் தயாராக இல்லை. மேலும், தலைவர்களும் கூட்ட நெரிசலை தவிர்த்து பிரச்சாரம் செய்வது என்பது இயலாத காரியம்.
பிரசாந்த் கிஷோர்
இதனால் தான் 3டி ஹோலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் மு.க.ஸ்டாலினை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகிய பிறகு சென்னை வரும் அவர், ஒரு வாரகாலம் இங்கு தங்கி இதுவரை தனது குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட களப்பணிகள் குறித்த விவரத்தை நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறார்.
முதல்முறையாக
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளிநாட்டுத் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்கள் போல் திறந்தவெளி மேடை, ஹை டெக் மைக் என புதுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார் அன்புமணி. இந்நிலையில் வரும் தேர்தலில் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.