இடைத்தேர்தலில் சறுக்கல்.. ஸ்டாலின் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்ப்பு!
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கலை கருத்தில் கொண்டு இனி ஒவ்வொரு அடியையும் பார்த்து கவனமாக அதே சமயம் நல்ல வியூகங்களுடன் எடுத்து வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை முக ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றுவது என்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது.
அரசியல் என்றில்லை எந்த துறையாக இருந்தாலும் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெற முடியும். அந்த வகையில் அரசியல் ஆலோசனைகளை வழங்குவதற்காகவே தனி ஒரு நிறுவனத்தை வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
அரியணை ஏறிய ரெட்டி
இவர் வகுத்த வியூகங்களால்தான் 2014-இல் பாஜக மகத்தான வெற்றி பெற்றது. அது போல் பீகாரில் நிதிஷ்குமாருக்கு வியூகம் வகுத்து வெற்றிக் கனியை பறிக்கச் செய்தவர் இவரே. மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைப்பயணம் செய்ய வைத்து ஆந்திரத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியை அரியணை ஏற்றிய பெருமையும் கிஷோரையே வந்து சாரும்.
ஒப்பந்தம்
அப்படிப்பட்ட கிஷோரின் ஆலோசனை பெற கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இவரது ஆலோசனைகளை ஏற்று கட்சியில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்ற கிஷோர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலோசகர் மீது நம்பிக்கை இல்லை
நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கான ஆலோசகர் வகுத்து கொடுத்த வியூகம் பெரிதும் கைகொடுத்தது. இதனால் அக் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்ததால் அந்த ஆலோசகர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.
உள்ளாட்சி தேர்தல்
இந்த நிலை தொடர்ந்தால் 2021-இல் புதிதாக வரும் கட்சிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவக் கூடும் என்பதால் பிரசாந்த் கிஷோரை கடந்த திங்கள்கிழமை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இவரது ஆலோசனையின் பேரில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக வியூகம் வகுத்துள்ளது.
பிரசாந்த் வியூகங்கள்
திமுகவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு, எந்தெந்த பகுதிகளில் செல்வாக்கு, எங்கே கட்சி பலவீனமாக இருக்கிறது, கட்சியின் செல்வாக்கை பெருக்கும் நபர்கள் யார், அதை கெடுத்து குட்டிச்சுவராக்கும் நபர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்களின் அடிப்படையில் பிரசாந்த் வியூகங்களை வகுப்பார்.