கமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல்
Recommended Video
சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடனே பணிகள துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக புதிய முயற்சியில் இறங்குவதாக கூறி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்தார். கிராம நிர்வாக சபை உள்பட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்த கமல், குறுகிய காலத்திலேயே தனது கட்சியை கிராமங்களில் பரப்பும் வேலையில் இறங்கினார் .அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. இதில் 11 இடங்களில் 3 வது இடத்தை பிடித்தது. கோவை, பொள்ளாச்சி, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றது.
பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு
இதனால் உற்சாகம் அடைந்த கமல் ஹாசன் உள்ளாட்சி தேர்தலக்கு தயாராகி வரும் நிலையில், 2021 சட்டசபை தேர்தலை குறி வைத்து தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக அண்மையில் கமல் ஹாசன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமல் ஹாசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
கமலுக்காக பணியாற்ற முடிவு
இதை ஏற்றுக்கொண்ட பிரசாந்த் கிஷோர் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
கட்சியின் தற்போதைய நிலை, வளர்ச்சி பாதைக்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும்படி பிரசாந்த் கிஷோர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறாராம். மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமலுக்காவும் வேலை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வரும் 2021ம் ஆண்டு மேற்கு சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதே சமயத்தில் தான் தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்றப்போவது உறுதியாகி உள்ளது.