மழை வேண்டி அதிமுக சார்பில் கோவில்களில் யாகம்... குடிநீர் கேட்டு திமுக போராட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் குடிநீர் கேட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வேண்டி அதிமுக சார்பில் இன்று முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், இன்று யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் செங்கோட்டையன் மழை வேண்டியும் வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது.
முதலில் விநாயகர் பூஜையும் அதனை தொடர்ந்து முருகன் அருள்வேண்டி சிறப்பு பூஜைகளும், அதன்பின்னர் வருணபகவான் மழை வேண்டி யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும் பூரணாகுதி செலுத்தியும் யாகவேள்வி நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டார். கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற யாகத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார் .யாகத்தைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த வருணஜப மகாயாகத்தில் அமைச்சர் காமராஜ் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த யாகத்தில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார்.
நாமக்கல் கொக்கராயன்பேட்டை பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டது. சென்னை அடுத்த பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் கோயிலில் வளர்க்கப்ப்டட சிறப்பு யாகத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப் பொய்கையில் வருண பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை, இதற்கு காரணம் முதலமைச்சர் பழனிசாமி தான் என்றார். மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க திமுக முனைவதில்லை என்றும் கூறினார்.