"எங்கள் அண்ணா".. சீக்கிரம் நல்லபடியா வாங்க "கேப்டன்".. கோவில் கோவிலாக கும்பிடும் தொண்டர்கள்!
விஜயகாந்த்துக்காக கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
Recommended Video
சென்னை: விஜயகாந்த் உடம்பில் என்னதான் பிரச்சனை என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும், அவரது நலன்விரும்பிகள், எங்கோ ஒரு மூலையில், ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்காக பிரார்த்தனைகள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
விஜயகாந்த்துக்கு இப்போது உடல்நிலை முன்பு போல இல்லை.. எங்கே போவதானாலும் சரி 2 பேர் எப்பவுமே கூடவே இருக்கவேண்டும் என்ற அளவுக்கு உள்ளது. அவர் நடந்து வந்தாலும் சரி, எழுந்து நிற்பதானாலும் சரி.. ஆளுக்கு ஒரு பக்கம் கைத்தாங்கலாக பிடித்தே இருந்தால்தான் அவரால் எதுவும் செய்ய முடியும்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் விஜயகாந்த்தின் பிறந்த நாள். வழக்கமாக விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளுக்கு ஏராளமான உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்வார். ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக தன் பிறந்த நாளை கொண்டாடுவார் விஜயகாந்த்.
ஸ்லிப்
அதன்படி இந்த பிறந்த நாளுக்கும் அவர் கட்சி அலுவலகத்திற்கு பிரேமலதா, சுதீஷூடன் வந்திருந்தார். சிறிது நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க எழுந்து நின்றார். ஆனால் யாருமே அவருக்கு உதவாத காரணத்தினாலோ என்னவோ, திடீரென ஸ்லிப் ஆகி விழுந்துவிட்டார். இதை பார்த்து, அங்கிருந்த எல்லோருமே பதைபதைத்து விட்டனர்.
சுதீஷ்
பிறகு உடனடியாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரேமலதாவும், பார்த்தசாரதியும் அவரை தூக்கி விட்டனர். முன்புபோல விஜயகாந்தை யாராலும் சரியாக பார்க்க முடிவதில்லை. எப்போதாவது பார்க்க நேரிடும்போது, அவரது தள்ளாமையை பார்த்ததும் மனசு கலங்கி விடுகிறது. கேப்டன் நன்றாக இருக்கிறார் என்று தொண்டர்களுக்கு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிஜமாகவே விஜயகாந்த்தின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை.
சிறப்பு பூஜை
எது எப்படி இருந்தாலும், தொண்டர்கள் விஜயகாந்தை வாழும் மகாத்மா கேப்டன் என்றே பாசத்தோடு கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டாலும் சரி, தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்துவிடுவார்கள். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையிலும் இறங்கி விடுவார்கள். இப்போதுள்ள தமிழக அரசியலில் வேறு தலைவருக்கு கிடைக்காத கொடுப்பினை இது ஆகும். இதற்கு காரணம் விஜயகாந்தை அரசியலையும் தாண்டி மக்கள் நேசிப்பதால்தான்.
அன்னதானம்
இந்த பிறந்தநாளுக்கு கூட, நெல்லை ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உட்பட பல்கூறு கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றன. ஏராளமானோருக்கு அன்னதானம் தரப்பட்டது. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, யாரும் செய்யாத அளவுக்கு பொது மக்களுக்கு உதவியவர் விஜயகாந்த். தொண்டு நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகள், ஏழை மாணவர்கள் படிப்புச் செலவு என்று எத்தனையோ கண்ணுக்கு தெரியாத பல உதவிகளை செய்து, லட்சக்கணக்கான மக்களை அன்று பிழைக்க வைத்தவர் விஜயகாந்த்.
வாழும் மகாத்மா
அவரது சேவையை பாராட்டி சிறந்த இந்திய குடிமகன் விருது வழங்கப்பட்டு இருந்தாலும், "வாழும் மகாத்மா" என்ற பட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக சிறப்பு வாய்ந்தது. சினிமாவிலும் பங்கு இல்லை, அரசியலிலும் பங்கு இல்லை.. ஆனாலும் வாழும் மகாத்மா என்ற பெயரை கொடுத்து அவரை உயர்த்தி உள்ளனர் மக்கள்.. இந்த பட்டத்துக்கு விஜயகாந்த் பொருத்தமானவர் என்பதையும் மறுக்க முடியாது!