ஆரம்பிக்கலாங்களா..நாயகன் மீண்டும் வர்றார்! லைவில் நித்தியானந்தா? உற்சாக பக்தாள்ஸ்! எப்போ தெரியுமா?
சென்னை : பாலியல் வன்கொடுமை கடத்தல் பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் தலைமறைவாக இருந்தாலும் அவ்வப்போது ஆன்லைனில் தோன்றி பக்தர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி வந்த சாமியார் நித்தியானந்தா, கடந்த சில நாட்களாக சைலன்ட் மோடில் இருக்கும் நிலையில் மீண்டும் அவர் எப்போது வருவார் என்பதை அவரது சீடர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.
உல்லாச உலகம் எனக்கே சொந்தம் செய்யடா செய்யடா ஜல்சா என நாளொரு வீடியோ,பொழுதொறு பேஸ்புக் போஸ்ட் என ஜாலியாக சிஷ்யகோடிகளுடன் தோசை சுட்டுக் கொண்டிருந்த அன்னாசி பழ கர்ப்பம் புகழ் சாமியார் நித்யானந்தா மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.
அரசுத் துறைகளில் இருக்கும் அத்தனை டிபார்ட்மெண்ட்களிலும் அவர் மீது அடுக்கடுக்காய் புகார்கள் குவிய வேறு வழியின்றி இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இளம்பெண் கடத்தல் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமம்- திருவண்ணாமலை ஆசிரமத்தில் போலீசார் தீவிர தேடுதல்!
சாமியார் நித்யானந்தா
தற்போது கைலாசாவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது ஆனாலும் கைலாசா எங்கே இருக்கிறது என்பதும் ஒரு மர்மமாகவே உள்ளது அடுத்தடுத்து அவர் மீது புகார் குவிந்ததால் இந்தியா திரும்ப வழியில்லாததால் ஆஸ்திரேலியா அருகில் ஒரு தீவை வாங்கி நித்தியானந்தா செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த இடத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு நித்தியானந்தா திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் மரணம் அடைந்து விட்டதாக கூட வதந்திகள் பரவின. இந்நிலையில் தான் முதன்முறையாக கடிதம் ஒன்றை எழுதினார் சாமியார் நித்தியானந்தா.
கோமா நிலையில்?
அதில் தான் இன்னும் மரணம் அடையவில்லை எனவும் சமாதி நிலையில் இருக்கிறேன் என பக்தர்களுக்கு கூறியதோடு சமாதி நிலையில் இருந்தவர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவேன் மீண்டும் வருவேன் என கூறியிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது வரை நித்தியானந்தா குறித்த தகவல்கள் இல்லை ஆனால் நாளொரு வண்ணமும் பொழுது ஒரு மணியுமாக அவர் குறித்த வதந்திகள்தான் பரவி வருகிறது சிறுநீரக கோளாறு நுரையீரல் பாதிப்பால் அவர் அவதி அடைந்து வருவதாகவும் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.
சமாதி நிலை
ஆனால் அடிக்கடி சமாதி நிலை என என்பது குறித்து பல்வேறு விளக்கங்களை கடிதம் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாகவே வெளியிட்டு வந்த நித்தியானந்தா அதற்குப் பிறகு நேரடியாக தோன்றவில்லை கடைசியாக அவர் தோன்றியது மதுரை சித்திரை திருவிழாவில் தான். கடந்த சில நாட்களாக சைலன்ட் மோடில் இருக்கும் நிலையில் மீண்டும் அவர் எப்போது வருவார் என்பதை அவரது சீடர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.
நேரலையில் நித்தி
தற்போது ஏகப்பட்ட மருத்துவர்கள் நித்தியானந்தாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி நேரலையில் சாமியார் நித்தியானந்தா பேசுவார் என அவரது சிஷ்யைகள் பதிவிட்டுள்ளனர். விரைவில் திரும்ப வருவேன் என நித்தியானந்தா கூறி வந்தாலும் எப்போது திரும்புவார் என்பது கூறப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு நித்தியானந்த பக்தர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி உள்ளது. வருகின்ற 13-ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு நித்தியானந்தா நேரலையில் வருவார் எனவும் விக்ரம் படத்தின் பாடலான நாயகன் மீண்டும் வரார் என்ற தீம் மியூசிக் கொண்டாடி மகிழ்கின்றனர் அவரது பக்தாள்ஸ்..